காவிரியில் பெருக்கெடுக்கும் நீர்.. ஒகேனக்கல் நீர்வரத்து 10,000 கன அடியாக உயர்வு.. பரிசல் இயக்க தடை!
தருமபுரி: காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பருவமழை காரணமாக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து உயர்ந்ததால் நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 14,136 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தமிழ்நாடு கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைகிறது. கடந்த வாரம் கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட 10,000 கன அடி நீர் பிலுகுண்டுலுவை வந்தடைந்தது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, சற்று முன்பு மதியம் 1 மணிக்கு மேல் ஒகேனக்கலில் நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் உடனடியாக பரிசல்களை கரைக்கு கொண்டு வந்தனர். பரிசல் இயக்க தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications