சும்மா இருக்க முடியாது! தலைமை கண்காணிக்கிறது! வேலை வாங்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
தருமபுரி: தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருவதை ஒட்டி நிர்வாகிகளை டிரில் எடுத்து வருகிறாராம்.
தாம் கொடுக்கும் அசைன்மெண்ட்களை கச்சிதமாக நிறைவேற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டும் ஓ.பி.அடிக்கும் நிர்வாகிகளுக்கும் குட்டும் வைக்கிறாராம் அவர்.
தருமபுரி மாவட்டத்தில் பாமக கணிசமான வாக்கு வங்கிகளை கொண்டிருப்பதால் அங்கு திமுக சற்று அதிக உழைப்பைச் செலுத்த வேண்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

தருமபுரி மாவட்டம்
தமிழகத்தில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றி ஆட்சியை பிடித்த திமுக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதனை இன்னும் ஸ்டாலினால் ஜீரணிக்கமுடியவில்லை எனக் கூறப்படும் நிலையில், அந்த மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் களமிறக்கப்பட்டுள்ளார். சீனியரான இவர் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக கொடியை பறக்கவிடுவார் என நம்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஸ்டாலின் நம்பிக்கை
அந்த வகையில் தலைமையின் நம்பிக்கையை நூறு சதவீதம் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டம் முழுவதும் ரவுண்ட்ஸ் அடித்து மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். அத்துடன் மாவட்ட திமுக நிர்வாகிகளை அழைத்து மீட்டிங் மேல் மீட்டிங் நடத்துகிறாராம். மேலும், யாரும் சும்மா இருக்கலாம் என நினைக்க வேண்டாம் என்றும் ஒவ்வொரு நிர்வாகிகளின் செயல்பாடுகளும் தலைமையால் கண்காணிக்கப்படுகிறது எனவும் அறிவுறுத்தியிருக்கிறாராம்.

வேலை வாங்குகிறார்
அதேவேளையில் கட்சியினர் அரசு ரீதியிலான சில கோரிக்கைகளை முன் வைத்தால் அதனை முடித்துக்கொடுக்கும் அமைச்சர், அதற்கேற்ற கட்சி வேலையை கேட்டு வாங்குகிறாராம். தாம் கொடுக்கும் அசைன்மெண்ட்களை கச்சிதமாக நிறைவேற்றும் நிர்வாகிகளை மனம் திறந்து பாராட்டும் அவர் ஏனோதானோ என்று இருப்பவர்களை முகத்துக்கு நேராகவே வெளுத்தும் வாங்குகிறாராம். இதனால் தருமபுரி மாவட்ட திமுகவில் அனல் பறப்பதாக கூறப்படுகிறது.

பாமக வாக்கு வங்கி
தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பது கவனிக்கத்தக்கது. சமுதாய ரீதியான உணர்வுகளால் வாக்குகள் சிதறுவதாக கருதும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து அதை செயல்படுத்தும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications