தர்மபுரியில் கல்குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டம்.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.. அதிகாரிகள் உறுதி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கல்குவாரிகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு கிரானைட் மற்றும் சாதாரணக் கற்கள் எனப் பல வகையான கனிமங்கள் கிடைக்கிறது. எனவே அரசு புதிய குவாரிகள் அமைக்க அதிக ஆர்வம் காட்டுகிறது. அந்த வகையில் தென்கரைக்கோட்டை அருகே கல்குவாரி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் கருப்பு கிரானைட் இருப்புக்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், அரூர் மற்றும் பாலக்கோடு வட்டாரங்களில் உயர்தர கருப்பு கிரானைட் கிடைத்து வருகிறது. இதனால் அரசு அதிக குவாரிகளை அமைத்து குத்தகைக்கு விட்டுள்ளது. இதனை அரசியல் பிரமுகர்கள்,முக்கிய விஐபிக்கள் குவாரிகளை எடுக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது தர்மபுரி மாவட்டத்திற்கு கணிசமான வருவாயை ஈட்டி தருகிறது.

அதேநேரம் தர்மபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான குவாரிகள் இயங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், தூசி மற்றும் ஒலி மாசுபடுதல், விவசாய நிலங்களுக்கு அச்சுறுத்தல் ஆகியவை குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட ஜம்மனஅள்ளி ஊராட்சி அண்ணாமலை அள்ளியில் தமிழ்நாடு கனிம வள நிறுவனத்திற்கு சொந்தமான இடம் இருக்கிறது. இந்த பகுதியில் புதிதாக கல்குவாரி அமைத்து கல்வெட்டி எடுப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தென்கரைக்கோட்டையில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். சுரங்கத்துறை மேலாளர் கணேசன், கனிமவளத்துறை அதிகாரி உதயகுமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
அந்த கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், இங்கு கல்குவாரி அமைத்தால் காற்றில் பரவும் கல் புகை, தூசியால் முதியவர்கள், குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் வெடி சத்தத்தால் குழந்தைகள், வயதானவர்கள் பாதிக்கப்படுவார்கள். அருகில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், கால்நடைகள் மீது கற்கள் விழுந்து சேதம் ஏற்படும். இதனால் இங்கு கல்குவாரி அமைக்கக்கூடாது என்று கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார்கள்.
கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பேசுகையில், எங்களின் எதிர்ப்பையும் மீறி அமைத்தால் கல்குவாரியால் ஏற்படும் பாதிப்புக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். அண்ணாமலைஅள்ளி பகுதியை சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கருத்து கேட்பு கூட்டத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications