கற்பை போல ஓட்டும் முக்கியமானது... வாக்குகளை விற்காதீர்.. சீமான் ஆவேச பேச்சு
தர்மபுரி: பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமோ அதே போல ஓட்டும் கற்பை போல முக்கியமானது தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூரில் அக்கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ருக்மணி தேவி, அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திலீப், பாப்பிரட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சதீஸ் ஆகியோரை ஆதரித்துப் பேசிய சீமான், நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் பிரச்சனை கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஆட்சியில் இருப்பவர்கள் வரவில்லை என்றும் அந்த நிலையை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஓட்டுக்கும் பணம் கொடுத்து வாங்க வருவார்கள். பணத்துக்கு ஓட்டுப் போடாதீர்கள். பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமோ அதே போல ஓட்டும் கற்பை போல முக்கியமானது தான். அதனால் தான் உங்கள் வாக்கை விலைக்கு விற்காதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
நாய் மேய்ப்பதை நாகரீகம் எனக் கருதுபவர்கள், ஆடுமாடு மேய்ப்பது அவமானம் எனக் கருதுவது எவ்வளவு பெரிய கேவலம் என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் சேவை செய்யக்கூடிய அனைத்து துறைகளும் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
நாடு போராட்டகளமாக மாறி கொண்டிருக்கிற நிலையில், நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் பேசுவது மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும் சீமான் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications