இலங்கையின் சுழலில் சிக்கி வீழ்ந்த 'நம்பர்-1' ஆஸி.. தொடரை கைப்பற்றியது இலங்கை
காலே: ஆஸ்திரேலிய அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இலங்கை அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இலங்கையியுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3-டெஸ்ட் போட்டிகள், 5-ஒருநாள் போட்டிகள், 2- இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
பின்னர் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால், இலங்கை அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 106 ரன்னில் சுருண்டது. இதில் தாக்குப் பிடித்த வார்னர் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 237 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 413 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியில் தில்ருவான் பெரேரா அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார்.
413 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 22 ரன்னுடனும், ஸ்மித் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்களால் திணறினர். வார்னர் 41 ரன்கள், ஸ்மித் 30 ரன்கள் என தங்களது விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து வந்த வோக்ஸ் 28, மார்ஷ் 18, நெவில் 24, ஸ்டார்க் 26 ரன்கள் என அடுத்தடுத்து அவுட் ஆக ஆஸ்திரேலியா 183 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 13-ந் தேதி தொடங்குகிறது. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மற்றும் 2-வது இன்னிங்சில் 64 ரன்கள், 6 விக்கெட்டுக்கள் வீழ்த்திய தில்ருவான் பெரேரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications