பழனி கிரிவல பாதையில் குவிந்த ஜேசிபிக்கள்.. 139 வீடுகள் இடித்து அகற்றம்.. கதறி அழுத பெண்கள்
திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவினை அடுத்து, பழனி கிரிவல பாதையில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 139 வீடுகள் மற்றும் பஞ்சாமிருத கடையும் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது. தங்கள் கண் முன்னே வீடுகள் இடித்து தள்ளப்பட்டதை கண்டு பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
உலகப்புகழ் பெற்ற முருகன் திருத்தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள், கிருத்திகை மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் பழனி முருகன் கோயிலின் கிரிவல பாதையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றுவது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியது பற்றி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இன்று விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள்..
முன்னதாக பழனி கிரிவல பாதை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பழனி அருகே வடக்கு தாதநாயக்கன்பட்டியில் நிலம் வழங்க வருவாய்த்துறை முடிவு செய்திருந்தது. அதன்படி கடந்த மாதம் 28-ந்தேதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யவும், நேற்று இடித்து அகற்றப்படும் என்றும் முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து பொதுமக்கள் அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் பழனி ஆர்.டி.ஓ. சரவணன், தாசில்தார் சக்திவேலன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நேற்று பழனி கிரிவல பாதைக்கு ஜேசிபிக்களுடன் சென்றனர். அங்கு இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் இடித்து அகற்றும் பணி நடந்தது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிந்திருந்தனர். கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பாதவிநாயகர் கோவில் பகுதியில் நேற்று தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பலத்த பாதுகாப்புக்கு இடையே ஜேசிபி எந்திரங்கள் மூலம் கிரிவல பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 139 வீடுகள், 3 கடைகள் இடித்து முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன.
இதற்கிடையே தாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்த வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்படுவதை கண்டு பெண்கள் அங்கு திரண்டு கண்ணீர் விட்டு அழுதனர். இதனிடையே மலையை சுற்றி கிரிவலம் வந்த பக்தர்கள் கிரிவீதியில் இருந்து அருள்ஜோதி வீதி வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பழனி கிரிவல பாதையில், சுமார் 100 ஆண்டுகள் பழமையான தனியார் பஞ்சாமிர்த கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications