கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க.. கண்ட்ரோல் இல்லா பேருந்துகள்! பேக்கரிக்குள் அலறிய பெண்..திண்டுக்கல் பரபர!
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த கடைக்குல் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ளது காமராஜர் பேருந்து நிலையம். இப்பேருந்து நிலையத்திற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான உள்ளூர், வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன.

அதேபோல் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். நகருக்குள் இருப்பதால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த கடைக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்வதற்காக இன்று மதியம் அரசு பேருந்து பயணிகளுடன் கிளம்பியது. பேருந்தை சுப்ரமணி என்ற ஓட்டுநர் இயக்கினார்.
ப்ளாட்பாரத்தில் இருந்து வெளியே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே இருந்த ஸ்வீட் கடையில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் கடைக்குள் புகுந்தது. இதனால் கடைக்குள் இருந்த பிரியா என்ற பெண் காயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவரின் உதவியோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் கடையில் இருந்த கண்ணாடி பொருட்கள் மற்றும் ஸ்வீட்டுகள் அனைத்தும் சேதமடைந்தது.
இந்நிலையில் அரசு பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதால் ஆங்காங்கே பழுதாகி நிற்பது இதுபோன்று விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தரம் குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. ஓட்டை உடைசலாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால் ஓட்டுநர் நடத்துனர்கள் சிரமத்தில் உள்ளனர். மேலும் அதனை நம்பி பயணிக்கும் மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டு கழன்று விழுந்ததும் தஞ்சையில் இரு அரசு பேருந்துகலின் ஆக்சில் ஒரே நாளில் உடைந்து கீழே விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
அரசு பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் அவை தரம் வாய்ந்த போக்குவரத்துக்கு உகந்த வகையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என செயலர் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் தற்போது வரை அவை வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. பல இடங்களில் ஓட்டை உடைசல் பேருந்துகளால் விபத்தில் நடந்து வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications