2000 ஆடு, 5000 கோழி..மலைமலையாய் சோறு! திண்டுக்கல்லே திணறிடுச்சே.. குழந்தைகளை ஏலத்தில் விடும் விநோதம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சுமார் 2000 ஆடுகள், 5000 கோழிகளை காணிக்கையாக வழங்கினர். டன் கணக்கிலான காய்கறிகள், மலை மலையாய் குவிக்கப்பட்ட சாதத்துடன் இந்த ஆடு, கோழி இறைச்சி ஒன்றாக சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுகிறது. இதனையடுத்து உணவு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை திருவிழாக்கள் என்றாலே அது கறி விருந்து தான். நூற்றுக்கணக்கான ஆட்டுக் கிடாய்களை வெட்டி மூட்டை மூட்டையாய் சாதத்தை சமைத்து பக்தர்களுக்கு விருந்து படைப்பது ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது.

குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வினோத திருவிழாக்கள் நடைபெறுவது குறித்து நிறைய செய்திகள் கேள்விப்பட்டிருப்போம்.
அதுமட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டு ஆண், பெண், ஜாதி, மத பேதமின்றி நடைபெறும் திருவிழாக்களும் ஏராளமாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அப்படி ஒரு திருவிழா தான் திண்டுக்கல் அருகே சுமார் 300 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் முத்தழகு பட்டியில் புனித செபஸ்தியார் கோவில் அமைந்திருக்கிறது. பல ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த மூன்றாம் தேதி செபஸ்தியார் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கடைசி நாளில் முக்கிய நிகழ்ச்சியாக திருப்பலிக்கு பிறகு அன்னதானம் நடைபெறும்.

இந்நிலையில் திருவிழாவின் தொடக்கமாக செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி மூன்று நாட்களுக்கு முன்பு தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக உலாவாக கொண்டு வரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டதுடன் திருவிழா தொடங்கியது.

தொடர்ந்து மூன்று நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதை அடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாபெரும் அன்னதானத்திற்கு பக்தர்கள் காணிக்கையாக ஆடு, கோழி, காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட கோழிகள், டன் கணக்கிலான கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் பக்தர்களால் வழங்கப்பட்டது.

இதையடுத்து பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் தனியாக பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் சுமார் 3000 கிலோ அரிசி, ஐந்து டன் காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றாக சமைத்து ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை காலையிலேயே உணவு சமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தேவையான பொருட்கள் அனைத்தையும் பக்தர்களே வழங்கியதோடு உணவு சமைக்கும் பணியிலும் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.

மேலும் உணவு சமைக்க தெரியாதவர்கள் கூட உதவி வேலைக்கு கலந்து கொண்டனர். தொடர்ந்து டன் கணக்கிலான சாதமும் கறி குழம்பும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் இரவு 7 மணிக்கு அன்னதானம் தொடங்கும். தொடர்ந்து புதன்கிழமை காலை வரை விடிய விடிய இந்த அன்னதானம் நடக்கும். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜாதி மத பேதமின்றி கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

குறிப்பாக இந்த கோவிலில் குழந்தைகளை ஏலம் நிகழ்வு ஒன்று நடைபெறும். அதாவது உடல்நலம் குன்றிய குழந்தைகள் நலமாகி வரும்போது குழந்தையை செபஸ்தியாருக்கே நேர்த்திக்கடனாக செலுத்தி விடுவார்கள்.

மேலும் குழந்தை இல்லாதவர்களும் செபஸ்தியாரிடம் வேண்டி குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் அந்த குழந்தையை கோவிலில் ஒப்படைத்து விடுவார்கள். பிறகு அந்தக் குழந்தை ஏலத்தில் விடப்படும். இதை அடுத்து பெற்றோர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு குழந்தைகளை ஏலத்தில் எடுத்துச் செல்வது வழக்கம்.

பெற்றோர்களைத் தவிர அந்த குழந்தையை வேறு யாரும் ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கமும் பல ஆண்டுகளாக அந்த கோவிலில் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications