அன்பு மலர்களே.. கட்சி அலுவலகத்தில் ஒன்று கூடிய ‘மாஜிக்கள்’! ஆனால் ஒருத்தர் மிஸ்ஸிங்! என்ன காரணம்?
திண்டுக்கல் : அதிமுகவின் கழக துணை பொது செயலாளராக நத்தம் விஸ்வநாதனும், அதிமுகவின் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டத்தில், முக்கிய நிர்வாகி ஒருவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக அதிமுகவின் கழக துணை பொது செயலாளராக நத்தம் விஸ்வநாதனும், அதிமுகவின் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டமாகும்.

திண்டுக்கல் அதிமுக
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், திண்டுக்கல்லில் முக்கிய அரசு பதவியை வகித்தவரும், முன்னாள் மாவட்ட செயலாளர், தற்போது அமைப்பு செயலாளர் என பல பதவிகளை வகித்த ஒரு முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர் கடந்த காலங்களில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் என இருவருக்குமே நெருக்கமாக இருந்தவர் தான், ஆனால் அவர் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என நிர்வாகிகள் பலரும் குழப்பமடைந்தனர். இதற்கும் ஒரு காரணம் உண்டு. ஆனால் கடந்த திண்டுக்கல் அதிமுகவின் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும்.

திண்டுக்கல் சீனிவாசன்
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல் அதிமுகவில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடிக்கு ஒன்றாகச் சேர்ந்து ஆதரவு தெரிவித்து உள்ளனர். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் கூட இரு தரப்பினரும் முட்டி மோதிக்கொண்ட நிலையில் தற்போது அனைவரும் ஒன்றிணைந்து உள்ளனர். நத்தம் விஸ்வநாதனால் வளர்த்து விடப்பட்ட பலரும் திண்டுக்கல் சீனிவாசன் தரப்புக்கு தாவிய நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிமுகவினருக்குள் அடிக்கடி மோதல் நிலவும். நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களை மேடையில் கூட ஏற விடாமல் தடுத்து தள்ளி விடுவதும், வாக்குவாதம் செய்வது என மோதல் களைகட்டும்.

நத்தம் விஸ்வநாதன்
அப்படி இருந்த அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் வருகை காரணமாக ஒன்று இணைந்துள்ளது. எதிரும் புதிருமாக இருந்தால் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக அவர்களுக்கும் மிகப்பெரிய பதவிகளை வழங்கியுள்ளார் எடப்பாடி. ஆனால் திண்டுக்கல் அதிமுகவை பொறுத்தவரை மோதல் என்பது எப்போதும் இருக்கும் என்பது கண்கூடாக தெரிந்தது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

மருதராஜ்
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தின் திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் முன்னாள் மேயரும் மாவட்ட செயலாளராக இருந்தவருமான மருதராஜ் கலந்து கொள்ளவில்லை . மேலும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை முற்றாக புறக்கணித்தனர். குறிப்பாக மருதராஜ் தற்போது கழக அமைப்புச் செயலாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாநகராட்சி தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் வெற்றி பெற்ற நிலையில் மருதராஜ் ஆதரவாளர்கள் மற்றும் மகன், மகள் தோல்வியை சந்தித்தனர். தனது மகன் ஜெயிக்க மட்டும் சீனிவாசன் பணத்தை வாரி இறைத்து நிலையில் மற்ற வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் கூட ஒழுங்காக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

குழப்பம்
எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன் இருந்த போதிலும் தேனியில் நடைபெற்ற பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் மருதராஜ் கலந்துகொண்டு ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார். நேரடியாக திண்டுக்கல்லில் அவர் செயல்படாவிட்டாலும் கடந்த சில நாட்களாக அவரது செயல்பாடுகள் அப்படித்தான் இருந்தது. இந்த நிலையில் திடீரென கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் சீனிவாசன் கை ஓங்கி நிலையில் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்ள சிறிது நாட்கள் என்ன செய்வது என்று எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்த மருதராஜ் பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.

குழப்பம் இல்லை
இந்த நிலையில் தான் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை அவர்களது இல்லங்களில் சந்தித்து மருதராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதனால் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை என்கின்றனர் அதிமுகவினர். அதே நேரத்தில் ஏதோ ஒரு விவகாரம் மூவருக்குள்ளும் வெடித்து கிளம்பி இருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள். இதனால் திண்டுக்கல் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications