ஏண்டா வீடியோ எடுக்குற.. விவசாயி மகனுக்கு போலீஸ் ஸ்டேசனில் பளார்! இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தனது மாடுகள் தொலைந்ததாக புகார் அளித்து பத்து மாதங்கள் ஆன நிலையில் காவல் நிலையத்தில் விசாரிக்கச் சென்ற விவசாயியின் மகன் காவல் ஆய்வாளரால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் அருகே உள்ள மா.மு.கோவிலூரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் பல ஆண்டுகளாக அப்பகுதியில் மாடுகளை வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு 05.11.2023 அன்று தனது பசுமாடு காணவில்லை என தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக் கொண்டு தற்போது பத்து மாதங்கள் ஆகின்ற நிலையில் திண்டுக்கல் தாலுக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து பலமுறை விவசாயி முகமது நஸ்ருதீன் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாலுகா காவல் நிலையத்திற்கு அலைந்து தனது மாடு காணாமல் போனது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன கேட்டுள்ளார். ஆனாலும் முறையான பதில் அவருக்கு கிடைக்காத நிலையில் நேற்று (05.09.2024) மதியம் தனது மகன் முகமது நசீர் மற்றும் உறவினர்களுடன் தாலுகா காவல் நிலையம் சென்று எப்படியாவது தனது மாடு கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
மேலும் காவல் ஆய்வாளர் கூறும் பதில்களை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து ஆதாரத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் காவல் ஆய்வாளர் சந்திரமோகனுக்கு தெரியாமல் வீடியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த காவல் ஆய்வாளர் சந்திரமோகன் செல்போனை பிடுங்கியதோடு, விவசாயி முகமது நஸ்ருதீனின் மகன் நசீரினை பிற காவலர்கள் உதவியோடு அடித்து உள்ளே இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த வீடியோ காட்சியானது நசிரீன் நண்பரின் தொலைபேசியில் பதிவான நிலையில், நீதிகேட்டு சமூக வலைதளங்கள் வேகமாக பரவியது. பத்து மாதங்களாக விவசாயி தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தான் வளர்த்த பசுமாடு காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்து காத்திருந்த நிலையில் காவல்துறையினர் இப்படி அடாவடித்தனமாக தாக்கியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையச் சரகம் ம.மு.கோவிலுாரைச் சேர்ந்த முகமது நசுருதீன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னுடைய இரண்டு மாடுகள் காணாமல் போய்விட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்துள்ளார்.
இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் 05.09.2024 ஆம் தேதி 14.00 மணியளவில் திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் மனுதாரர் திரு. முகமது நசுருதீன் மற்றும் அவரது மகன் முகமது உசேன் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டுள்ளார். அந்த விசாரணையை மனுதாரரின் மகனான முகமது உசேன் என்பவர் தன்னுடைய அலைபேசியில் வீடியோ படம் எடுத்துள்ளார்.
காவல் ஆய்வாளர் ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கூறி அவருடைய அலைபேசியை பறிக்க முயன்றபோது மேற்படி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான காவலர் மனுதாரரின் மகனான முகமது உசேனை கையால் தாக்கியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வரப்பெற்றன. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநரை இன்று (06.09.2024) ஆம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் ஆய்வாளர், திண்டுக்கல் தாலுகா மேற்படி சம்பவத்தை தடுக்க தவறியதாலும் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாலும் உடனடியாக அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது” என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications