திண்டுக்கல்: வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி.. சிக்கிய இளைஞர்.. ‛துணிவு’ படம் காரணமா?
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் இன்று பட்டப்பகலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குள் நுழைந்த நபர் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊழியர் ஒருவர் வங்கியில் இருந்து வெளியே ஓடிவந்து கூச்சலிட்டதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கொள்ளையனை பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தான் அவர்‛துணிவு' படம் பார்த்து கொள்ளையில் ஈடுபட்டதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கி அமைந்துள்ள இடம் என்பது எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் தான் இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பணிக்க வந்து கொண்டிருந்தனர்.
காலையில் வங்கியில் 3 ஊழியர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்களின் பணிகளை துவங்கினர். இந்த வேளையில் இளைஞர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்தார். வாடிக்கையாளராக இருப்பார் என வங்கி ஊழியர்கள் நினைத்து தங்களின் பணியை செய்து வந்தனர்.
பூலான்தேவி பாணியில் துணிகரம்.. ஓடும் ரயிலில் பயணிகளிடம் பல லட்சம் நகைகள் கொள்ளை.. உறைந்த மக்கள்
வங்கியில் கொள்ளை முயற்சி
இந்த வேளையில் அந்த இளைஞர் மிளகாய்பொடி, பெப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு உள்பட கூரிய ஆயுதங்கள் வைத்திருந்தார். அதோடு மிளகாய் பொடி தூவி, பெப்பர் ஸ்பிரே அடித்து மிரட்டி ஊழியர்கள் 3 பேரை இருக்கைகளில் கையை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்றார். இந்த வேளையில் ஊழியர் ஒருவர் கொள்ளையனிடம் இருந்து தப்பினார். அவர் உடனடியாக வங்கியில் இருந்து வெளியே ஓடிவந்து மர்மநபர் கொள்ளையடிக்க முயற்சிப்பது பற்றி சாலையில் நின்று கத்தியடி கூறினார்.
துணிந்து பிடித்த பொதுமக்கள்
இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக வங்கிக்குள் சென்று அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். இதையடுத்து பிடிபட்ட நபரை பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
யார் இவர்?
விசாரணையில் அவர் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கலீல் ரகுமான் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையில் இவர் மட்டும் ஈடுபட்டாரா? பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
‛துணிவு’ படம் காரணமா?
இந்நிலையில் தான் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கலீல் ரகுமான், வாழ்க்கையில் விரக்தி அடைந்து இருந்ததாகவும், சமீபத்தில் அவர் நடிகர் அஜித்தின் துணிவு படம் பார்த்த நிலையில் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு கைவரிசை காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் இன்று தாடிக்கொம்பு சாலையில் உள்ள வங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.