அமித்ஷா வருவதே ‘அதற்கு தான்’..பயத்தில் மு.க.ஸ்டாலின்! ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார் அர்ஜுன் சம்பத்
திண்டுக்கல்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை முதல்வர் ஸ்டாலினை உளர வைத்துள்ளது எனவும், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, திமுகவிற்கு பதில் சொல்ல, வியூகம் வகுக்க தான் அமித்ஷா வருகிறார் எனவும், நிச்சயம் அரசியல் மாற்றம் நடக்கும் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ் கிளப் கூட்ட அரங்கில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் முருக பக்தர் மாநாட்டிற்கு அரசு எந்த இடையூறும் செய்யக்கூடாது. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அனைத்து கட்சியினரையும் இந்த மாநாட்டிற்கு அழைத்துள்ளோம்
பெங்களூரில் கூட்ட நெரிசல் காரணமாக 15 பேர் உயிரிழந்த இடத்தில் முதல்வர் செல்பி எடுத்துக் கொண்டு இருக்கிறார். இதேபோல் தமிழ்நாட்டில் விமான சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்தனர். இவை அனைத்தும் ஆட்சியாளரின் தவறு.

இதை சரி செய்ய கூறினால் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு செல்லாதீர்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகிறார். திமுக மாநாடு நடத்தி கூட்டம் கூட்டினால் நாகரிகம். நிர்வாகம் செய்ய தெரியவில்லை. திமுக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மின்கட்டணத்தை உயர்த்தும் வழிகளை வைத்துள்ளனர். மின்சாரத்தை உற்பத்தி செய்ய கவனம் கொடுக்காமல், மின்சாரத்தை வெளியில் இருந்து வாங்குகின்றனர் அப்பொழுதுதான் கமிஷன் கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் கமிஷன் கலெக்சன் கரப்ஷன் என உள்ளார். மின்வாரியம் ஊழல் வாரியமாக செயல்படுகிறது.
பேருந்து நிலையங்களை அடமானம் வைத்து சம்பளம் கொடுக்கும் நிலை தற்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளது. அரசு பஸ்ஸின் அவலம் எல்லோருக்கும் தெரியும் சக்கரம் கழன்று ஓடும், படிக்கட்டுகள் இருக்காது, பஸ்ஸில் குடை பிடிக்க வேண்டும். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளனர். சிமெண்ட் பக்கத்து மாநிலத்தில் விற்கும் விலையையும் நமது மாநிலத்தில் விற்கும் விலையையும் பார்க்க வேண்டும். கட்டுமான பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
கேரளா கர்நாடகாவில் மணல் எடுக்க முடியாது ஆனால் கேரளா மாநிலத்திற்கான கட்டுமான பொருட்கள் குமரி நெல்லை மாவட்டத்தில் இருந்து செல்கிறது. இதில் மனோ தங்கராஜிற்கு பங்கு உள்ளது. 24 மணி நேரமும் டாஸ்மாக் வளர்ச்சி குறித்து தமிழக அரசுக்கு கவலை உள்ளது. மத்திய அரசு பள்ளி கல்வித்துறைக்கு பணம் ஒதுக்கினாலும் இல்லை என்றாலும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கி தேவையான வசதிகளை செய்யும் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் படிப்பதற்கான திட்டத்திற்கான பணத்தை தற்போது வரை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்காமல் உள்ளார்.
கேரளாவில் பிரனாயி விஜயன், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியோர் மத்திய அரசின் கல்விக் கொள்கை ஏற்றுள்ளனர். ஆனால் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏழை மாணவர்கள் கல்வி கற்பது பாதிக்கப்பட்டுள்ளது. மக்களைக் காப்பாற்ற வேண்டாம் என்றால் திமுகவை அகற்ற வேண்டும். தமிழகத்தில் வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆதரவாக உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் நல்லிணக்கமான ஆட்சி இருக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நல்லாட்சி புரிந்தார். மின்சார தட்டுப்பாடுகள் இல்லை, கொரோனாவில் சிறப்பான செயல்பாடு, வெள்ள நிவாரண பணிகள் சிறப்பாக இருந்தது, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது, விலைவாசி, சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அறிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் வேலுமணி அப்போது 36 விருதுகள் வாங்கினார். மத்திய அரசிடம் இணக்கமாக இருப்பது எம்ஜிஆரின் கொள்கை." என்றார்.












Click it and Unblock the Notifications