பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 1 முதல் வரப்போகும் மாற்றம்.. பக்தர்களே படிச்சிட்டு போங்க
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்களின் செல்போன்களை ஆலய வளாகத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்க 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பிரபல கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், பத்மாவதி தாயார் கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆலய நிர்வாகம் சார்பில் செல்போனை பாதுகாக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாமி தரிசனம் முடிந்த பின்னர் செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

கருவறையில் உள்ள தெய்வங்களை புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்பதற்காகவே செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வ சிலைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கோயிலில் செல்போன் பயன்படுத்தினால் அதை பறிமுதல் செய்து மீண்டும் பயன்படுத்தியவர்களிடம் அதனை ஒப்படைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக்காக்கும் விதமாக செல்போன் தடையை நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.
திருப்பதியில் வாசலில் புகைப்படம் எடுக்க முடியாது; தமிழ்நாட்டில் சாமி சிலை முன் செல்பி எடுக்கின்றனர். கோயில் அர்ச்சகர்களே புகைப்படம் எடுத்து தங்களின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகின்றனர் என நீதிபதிகள் தங்களின் உத்தரவின் போது தெரிவித்திருந்தனர்.
இதனிடையே அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தங்கள் செல்போன் மூலம் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். மேலும் அனுமதியின்றி கேமராக்கள் கொண்டு வந்து படம் பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகின்ற அக்டோபர் 1 ம் தேதி முதல் செல்போனுக்கு தடைவிதிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில் பழனி முருகன் கோவில் உட்பட பாதவிநாயகர் கோவில், மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய மூன்று இடங்களில் பக்தர்கள் தங்களது செல்போனை 5 ருபாய் கட்டணம் செலுத்தி வைத்துக்கொள்ளவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
கோவில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி கோவிலுக்குள் புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள், செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும். இதற்கு கட்டணமாக செல்போனுக்கு ரூ.5 வசூலிக்கப்படும். தரிசனம் முடிந்த பிறகு அதனை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பக்தர்களுக்கு செல்போன் வைக்கும் இடம் குறித்த தகவல்கள் தெரிவிக்கும் விதமாக பேருந்து நிலையம் முதல் பழனி கோவில் மலையடிவாரம் வரை ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கவும், பக்தர்கள் கூட்ட நெரிசலில் நின்று நேரத்தை வீணாக்குவதை தவிர்க்க பணியாட்களை அதிகப்படுத்தவும், மேலும் பக்தர்கள் நிழற்குடைகள் அமைக்கவும் கோவில் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பக்தர்கள் கோவிலுக்கு வரும் போது செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications