பழனி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன நகராட்சி.. மொத்தமாக அடைக்கப்பட்ட கடைகள்
திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் ஆக்கிரிமிப்புகள் மொத்தமாக இடித்து அகற்றப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் தேவதஸ்தானத்தைக் கண்டித்து கடைகளை மொத்தமாக அடைத்து இன்று போராடினார்கள். இந்த போராட்டத்திற்கு பழனி நகராட்சி தலைவர் தலைமையில் மொத்த கவுன்சிலர்களும் ஆதரவு திரட்டினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில் ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் பல்லாயிரம் பேர் வருவார்கள். கோயிலில் 3 கி.மீ. தூரம் உள்ள கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்நிலையில் அடிவாரம் சுற்றியுள்ள பகுதியில் ஆக்கிரப்பு கடைகள் அதிகமாக இருப்பதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படியே கடந்த மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அத்துடன் தனியார் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சென்று வர வசதியாக பேட்டரி கார்கள், மினி மற்றும் மின்சார பேருந்துகள் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் எனில். பழநி சந்நிதி வீதி, பூங்கா சாலை, இட்டேரி சாலை, அய்யம்புள்ளி சாலையை கோயில் வசம் ஒப்படைக்க கோரி, தேவஸ்தான நிர்வாகம் நகராட்சியை நிர்பந்திக்கிறதாம்.
இதனால் பழனி கோயிலை நம்பி வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான சிறு குறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பழனி கோயில் நகராட்சி விஷயங்களில் தலையிடுவதாகவும் கிரிவலப்பாதையானது, நகராட்சிக்கு சொந்தமானது என்றும் இதை பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 1948ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது..
இதில், 1974ஆம் ஆண்டு அரசாணையின்படி கிரிவலப்பாதையில் கோவில் நிர்வாகம் அடைக்கக் கூடாது என்கின்ற உத்தரவை மீறி தற்போது நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, கிரிவலப்பாதையில் அனைத்து விதமான வாகனங்களும் இவ்வழியாக செல்ல பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் தடை விதித்திருக்கிறது. இதனால், ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லவும் முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏராளமான கடைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் , மாற்று ஏற்பாடுகள் செய்து தராததால் தங்களது வாழ்வாதாரத்தை ஏற்கனவே இழந்துள்ள சிறு குறு வியாபாரிகளும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரரத்தில் பழனி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். அத்துடன் நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும் இன்று (ஜூலை 13) கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகராட்சி கவுன்சிலர்கள், வணிகர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படியே பழனி அடிவாரம், பேருந்து நிலையம், சந்நிதி வீதி, மார்க்கெட் சாலை, திண்டுக்கல் சாலை, ஆர்.எப்.சாலை என நகர் பகுதியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், நகைக்கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் உட்பட மற்ற கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பழனி நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் 33 வார்டுகள் உறுப்பினர்களும், ஒவ்வொரு கடைகளாக சென்று கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்கள். இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே உணவு பொட்டலங்கள், பிரட், பால் உள்ளிட்டவை வழங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications