திண்டுக்கல்லில் சொத்துக்காக சண்டையிட்ட மகன்கள்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் முதிய தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு அருகே உள்ள முக்கையகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொப்பனனகவுண்டர் இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், அழகர்சாமி, முத்துச்சாமி, மணி ,முத்தம்மாள் என இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் அழகர்சாமி முத்துசாமி ஆகியோர் திருமணம் முடித்து தங்கள் மனைவி குழந்தைகளுடன் அதே ஊரில் உள்ள பொப்பனனகவுனடருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். மணி மற்றும் முத்தம்மாள் ஆகியோரை குஜிலியம்பாறை அருகே திருமணம் செய்து கொடுத்து நிலையில், மகன்கள் இருவரும் முதிய தம்பதிகளை பாராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையனையடுத்து தம்பதியினர் குஜிலியம்பாறையில் உள்ள மருமகன் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

சொத்துக்காக சண்டையிட்ட மகன்கள்
பெற்றோர்களை பராமரிக்காமல் கைவிட்டாலும் அழகர்சாமி முத்துச்சாமி ஆகியோருக்கு பெற்ற தகப்பன் தாயாரிடம் சொத்து பிரித்துதரக் கோரியுள்ளனர். ஆனால் தற்போதே தங்களை பிள்ளைகள் கவனிக்காத நிலையில் சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் தங்களை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள் என நினைத்து பொப்பனனகவுண்டர் அதற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக குஜிலியம்பாறை சென்ற முத்துச்சாமியும், அழகர்சாமியும் சொத்துக்களை பிரித்துத் தரக்கோரி அடிக்கடி சண்டை போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

முதிய தம்பதிகள் தற்கொலை
பெற்ற மகன்களால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதை தாங்கிக்கொள்ள முடியாத முதிய தம்பதியினர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளனர். மகள்களிடம் கூட சரியாகப் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு இரவு உணவுக்குப் பிறகு தூங்கச் சென்ற தம்பதியினர் காலை விடிந்து நீண்ட நேரமாகியும் எழவில்லை. மகள்கள் எழுப்பியும் இருவரும் கண் விழிக்காத நிலையில், அருகிலுள்ள மருத்துவர் ஒருவரை அழைத்துள்ளனர். பரிசோதனையில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

மன உளைச்சலில் விபரீத முடிவு
முதிய தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து கேட்டு மகன்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சண்டையிட்டதால் மன உளைச்சலில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்து எனும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து எரியோடு காவல் துறையினர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகள்கள், மகன்களிடம் விசாரணை
இதைத்தொடர்ந்து எரியோடு போலீஸார் அழகர்சாமி மற்றும் முத்துசாமி, மணி, முத்தம்மாள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்து பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications