தவெக நிர்வாகி நிர்மல் குமாருக்கு ஜாமீன்.. அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் விடுவிப்பு
திண்டுக்கல்: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பற்றியும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது விஜய் குறித்து சில கருத்துகளை சென்னை ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. தவெக நிர்வாகிகள் பலரும், நீதிபதி குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டனர். அவதூறுகள் பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகினறன.
இந்தநிலையில் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டியை சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான நிர்மல்குமார் (வயது 35). இவர், ஃபேஸ்புக் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது.
இதைத்தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மல்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர் ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக சாணார்பட்டி போலீசார் கடந்த 12ஆம் தேதி நிர்மல்குமாரை கைது செய்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டு பல மணி நேரமாகியும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருவதாக அக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என த.வெ.க.வினர் கோஷமிட்டனர். காவல்துறையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட தவெக கட்சியினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து ஜே3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட திண்டுக்கல் தெற்கு தவெக மாவட்ட செயலாளர் நிர்மல்குமாருக்கு வரும் 24 ஆம் தேதி தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் நிர்மல் குமார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications