திண்டுக்கல் அருகே டமால் டுமீல்.. அணுகுண்டு வெடிப்பது போல சத்தம் கேட்பதால் மக்கள் பீதி
திண்டுக்கல்லில் அடிக்கடி வெடி சத்தம் கேட்பதால் மக்கள் பயந்து உள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டமால்... டுமீல் என சத்தம் கேட்டு கொண்டே இருப்பதால் கிராம மக்கள் பயந்து போய் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில்தான் இந்த சத்தம் கேட்கிறது. குறிப்பாக திண்டுக்கல், வேடசந்தூர், சாணார்பட்டி, நத்தம், ரெட்டியார்சத்திரம் போன்ற பகுதிகளில், மர்மமான முறையில் பெரிய அளவில் சத்தம் வருகிறதாம். சில சமயம் விமான சத்தமும் கேட்கிறதாம்.
அந்த சத்தம் ஏதோ அணுகுண்டு வெடிப்பது போல இருப்பதாக மேற்கண்ட பகுதிகளில் உள்ள மக்கள் கூறுகிறார்கள். இந்த சத்தம் எங்கிருந்து வருகிறதே என்று தெரியவில்லை, யார் வெடிக்கிறார்கள், எதனால் இப்படி பயங்கரமான சத்தம் கேட்கிறது என தெரியாமல் மக்கள் குழம்பி போய் உள்ளனர்.
இந்த சத்தம் கேட்டுவிட்டால், தோட்டங்களில் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, மாடுகள் என எல்லாமே சிதறி ஓடுகிறதாம். அதேபோல தெருநாய்களும் மிரண்டுபோய் ஓடுகின்றதாம். கால்நடைகள் இப்படி என்றால், சத்தத்தை கேட்டவுடன் வீட்டுக்குள் இருக்கும் மக்கள் தலைதெறிக்க வெளியே ஓடிவருகிறார்கள். இப்படித்தான் 10 நாட்களாக நடந்து வருகிறதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக கனிமவளதுறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் விசாரித்து, ஆய்வு நடத்தி வருகிறார்கள். "அந்த சத்தத்தை கேட்கவே உடம்பெல்லாம் நடுங்குது. இப்படி ஆடுகள், மாடுகள் பயந்து ஓடுவது நல்லது கிடையாது, என்னமோ விபரீம் நடக்க போவதாக இருந்தால்தான் இப்படி மிரளும். அதுதான் எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று கிராம மக்கள் பயத்துடன் கூறுகிறார்கள்.