பழனி ராஜகோபுரத்தில் இடிந்து விழுந்த ‘துண்டு’.. பதற்றமான பக்தர்கள்! கோவில் நிர்வாகம் சொன்ன விளக்கம்!
திண்டுக்கல் : உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பாபிஷேகம் நடந்த இரண்டாவது ஆண்டே சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் பதற்றமடைந்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.

கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 48 நாட்கள் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. அந்த மண்டல பூஜை காலத்தில் உச்சி காலத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டல பூஜை காலங்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜையும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் கும்பாபிஷேகம் முடிந்து இன்னும் முழுமையாக 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் பழனி கோவில் ராஜகோபுரம் சேதமடைந்த சம்பவம் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மலைக்கோவிலின் ராஜ கோபுரம் உச்சியில் ஒரு மூலையில் உள்ள இரண்டு புறமும் கொம்பு போன்ற பகுதியில் ஒரு பகுதி உடைந்துள்ள சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சேதத்திற்கு என்ன காரணம் என வல்லுனர்கள் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். மேலும் பழனி கோயில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்கள் பதற்றமடைய தேவையில்லை என பழனி கோவில் நிர்வாகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது,"12ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பதுமைகள் மற்றும் சிற்பங்கள் சேதமடைவது இயல்பானது. பழனி கோவிலில் உள்ள குரங்குகள் கோவில் கோபுரங்களில் ஏறி அதில் உள்ள சிற்பங்கள் மற்றும் பதுமைகளை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. மேலும் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே கவலை கொள்ள வேண்டும் எனவும், பழனி கோவில் இராஜ கோபுரத்தில் சேதமடைந்த பகுதியை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே பக்தர்கள் கவலை கொள்ள வேண்டாம் எனவும் திருக்கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications