திண்டுக்கல் திமுகவில் ஒரே ரகளை! மல்லுக்கட்டிய மாநகராட்சி பெண் கவுன்சிலர் வீடியோவில் சரமாரி புகார்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திமுகவில் மாநகராட்சி கவுன்சிலர்களிடையே மோதல் இப்போது பகிரங்கமாக வெடித்திருக்கிறது. சக திமுக கவுன்சிலரின் கணவரே தம்மை திமுகவுக்கு எதிரியாக சித்தரித்து வருவதாக வீடியோ பதிவு வெளியிட்டு சரமாரியான புகார் தெரிவித்துள்ளார் மற்றொரு கவுன்சிலர் இந்திராணி விஜயன்.
திண்டுக்கல் திமுகவில் நன்கு அறியப்பட்ட பெண்களில் கவுன்சிலர் இந்திராணி விஜயனும் ஒருவர். திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றிய போது, மேயர் பதவிக்கு இந்திராணி விஜயன் பெயரும் அடிபட்டது. ஆனால் மேயர் பதவி இளமதிக்கு போனது.

இதன்பின்னர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டத்தில், நான் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? 16 மாதங்களாக மாநகராட்சியில் எந்த பணியுமே நடக்கவில்லை என பகிரங்கமாக இந்திராணி விஜயன் குற்றம் சாட்டினார். இதனால் திமுக மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒருவழியாக கவுன்சிலர் இந்திராணியை இருவரும் சமாதானம் செய்தனர்.
அண்மையில் திண்டுக்கல் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் பதவி இந்திராணிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று வீடியோ பதிவு ஒன்றை குமுறலுடன் வெளியிட்டுள்ளார் இந்திராணி விஜயன். அதில், சக கவுன்சிலரான சுவாதி என்பவரது கணவர் கோல்ட் ஸ்டார் ஜெயராமன், தம்மை திமுகவுக்கு எதிராக சித்தரிக்கிறார்; இதற்காக திமுகவினருக்கு நெருக்கடி தருகிறார் என்றும் ஒரு பெண் அரசியலுக்கு வருவதை சகிக்கவே முடியாதா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார் இந்திராணி விஜயன்.
மேலும் இந்த விவகாரத்தில் மூத்த அமைச்சரான ஐ. பெரியசாமி, திமுக மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; கழகம் தான் என்னுடைய உயிர்; திமுக வாழ்க என்றும் கண்ணீருடன் இந்திராணி விஜயன், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் இப்போது திண்டுக்கல் திமுகவில் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications