60 ஆடு.. விடிய விடிய கறிவிருந்து.. மணக்க மணக்க மட்டன் குழம்பு.. திண்டுக்கல்லின் மூக்கை துளைத்து.. அட
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த திருவிழாவில்?
விநோத திருவிழாக்கள் என்பது இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது.. அதில் ஒன்றுதான், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள்.. பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களை போலவே, ஆண்களுக்கென்றே பிரத்யேகமாக கொண்டாடப்படும் திருவிழாக்களும் உண்டு.

சிவகங்கை: உதாரணத்துக்கு சிவகங்கை அருகே உள்ள திருமலை கிராமத்திலும், மடைக்கருப்பசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருவிழா நடக்கிறது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், சித்திரை திருவிழாவின்போது, ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.
அதேபோல, உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று மட்டும் திருவிழா நடைபெறும்.. இந்த வழிபாட்டிலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்..
வேட்டைக்காரன் கோயில்: அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் தற்போது திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. நத்தம் அருகே உலுப்பக்குடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு வருடங்களாகவே, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா நடக்கிறது.. ஆனால், பிறந்த குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையில் பெண்கள் யாருமே இந்த திருவிழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை.
இந்த விழாவின்போது, ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த திருவிழா 2 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும்.. இதன் முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.
முதல் திருவிழா: அப்போது, நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு துவங்கப்பட்டது. பிறகு, நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டன.. 100 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இறுதியில், 100 அண்டாக்களில் சாப்பாடு தயார் செய்யப்பட்டு, 3,000 மேற்பட்ட ஆண்களுக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. நேற்றைய தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா ஆரம்பமானது..
பிறகு பக்தர்கள் நேர்த்திக்கடனாக தந்த 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. இதையடுத்து, இரவெல்லாம் விடிய விடிய அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.
இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தன..
ஆண்கள்: பிறகு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது... இந்த கறிவிழாவில், திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்...
நத்தம் மட்டுமல்லாமல், உண்ணாம்பட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் இந்த கறிவிருந்தில் கலந்து கொண்டனர்.
கறிவிருந்து: இரவு முழுவதும் விடிய விடிய சமைத்து, காலையில் அனைவரும் ஒன்றுகூடி விருந்து சாப்பிட்டதுடன், வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து, இந்த கறிவிருந்தில் பங்கேற்றிருந்தனர்.. அத்துடன், ஆர்வத்துடன் இந்த திருவிழாவை கண்டுகளித்தும் சென்றனர்.












Click it and Unblock the Notifications