அய்யய்யோ திமுகவில் வாரிசு அரசியல்.. மகனை மேடையில் வைத்து கொண்டு வசைபாடிய திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டது; வாரிசு அரசியலால் திமுக அழிந்து போகும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார். திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் அவரது மகனும் திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான ராஜ்மோகன் மேடையில் அமர்ந்திருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சராகப் பதவியேற்றார். தம் மீது வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களை முன்வைப்போருக்கு செயல்கள் மூலம் பதிலடி தருவேன் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் எனக் கழக முன்னோடிகள் வரிசையில், களம்பல கண்ட போராளியான கழகத் தலைவர், முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று இணைகிறேன். இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். 'விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்' என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் திருச்சி சாலை என்.ஜி.ஓ.காலனி உழவர்சந்தை அருகே திமுக ஆட்சியைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது: தமிழகத்தில் விடியலை ஏற்படுத்துவோம் என திமுக பொய்யான வாக்குறுதியைத் தந்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணம், பால் விலை, குடிநீர் வரி என அத்தனையையும் உயர்த்திவிட்டது. மாதம் ஒரு முறை மின்கட்டணத்தை கணக்கிடுவோம் என்ற திமுக, இப்போது பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது. பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் அத்தனை விலையும் உயர்த்தப்பட்டுவிட்டது.
தமிழக மக்கள் கடும் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றனர். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினோ, அதைப் பற்றி கவலைப்படாமல் மகன், உதயநிதியை அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். இது ரோமாபுரி நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததைப் போலவே இருக்கிறது.
திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருக்கின்றனர். ஆனால் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சிக்கு அழிவு ஏற்பட்டதே வாரிசு அரசியலால்தான். அதேபோல திமுகவுக்கும் வாரிசு அரசியலால்தான் அழிவு ஏற்படும். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசு தர வேண்டிய கடன் ரூ20,000. ஏனென்றால் குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 தருவதாக கூறினர். சிலிண்டருக்கு ரூ100 தள்ளுபடி செய்வோம் என்றனர். இதன்படி பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 18 மாத கால திமுக அரசு ரூ20,000 கடன் வைத்திருக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. அண்ணா திமுகவுக்கு மக்களிடத்தில் ஆதரவு பெருகிவிட்டது. இதனை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்துவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள், அண்ணா திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாரிசு அரசியலைப் பற்றி பேசும் போது, அவரது மூத்த மகனும் திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான சி.ராஜ்மோகனும் அதே மேடையில்தான் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications