சனாதன ஆதரவு.. சாதி வெறி..சிக்கலில் பேராசிரியர்! இப்போல் பாலியல் புகார் வேற.. களத்தில் குதித்த திமுக!
திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்த சுகாதார அலுவலர் ரெங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக மாணவரணி சார்பில், காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேராசியர் ஏற்கனவே ஒரு கட்சிக்கு ஆதரவாக வாட்ஸாப் குரூப் ஆரம்பித்து உள்ளான நிலையில், தற்போது பாலியல் குற்றச்சாட்டிலும் சிக்கியுள்ளார்.
கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்கும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலிமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு கிராமிய சுகாதாரம் மற்றும் துப்புரவு ஆய்வாளர் பட்டயப்படிப்பு துறையில் சுகாதார அலுவலராக பணிபுரியும் டாக்டர் எ.ரெங்கநாதன் என்பவர் மாணவர்-மாணவியர் மத்தியில் சாதி, அரசியல் மற்றும் தீண்டாமை கருத்துக்களை பற்றியும், சனாதனத்திற்கு ஆதரவாகவும் திராவிடத்திற்கு எதிராகவும், சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அவர் கட்டாய விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பேராசியர் ரெங்கநாதன் மாணவ-மாணவிகள் மத்தியில் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இது தவிர கள்ளர் சமுதாயத்தினரை திருட்டு சமுதாயத்தினர் என்றும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க தகுதியற்றவர்கள் என்றும், குலத்தொழிலை பார்க்க வேண்டும் என ஒவ்வொரு சமூகத்தினரையும் பற்றி அவதூறாக பேசி உள்ளார். இதுபோக திராவிடம் என்பது குடிக்க செய்து குடியைக் கெடுக்கும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி திராவிடத்திற்கு எதிராக எழுதினால் இன்டெர்னல் டெஸ்ட்டில் கூடுதலாக மதிப்பெண்கள் தருவேன் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தங்கள் துறை தலைவர் ஜான்சிராணியிடம் புகார் மனு அளித்துள்ளனர். பட்டய படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 35 பேரும் தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு துறை முதல்வர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும், சில மாணவ அமைப்புகளுக்கும் புகார் மனுக்களை மாணவர்கள் அனுப்பி உள்ளனர்.
இதை கேள்விப்பட்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் காந்திகிராமம் பல்கலை பதிவாளர் இராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தனர். இதனையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஐபி செந்தில்குமார், காந்திகிராம பல்கலையில் சுகாதாரத்துறையில் துப்புரவு ஆய்வாளர் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அந்த சுகாதார அலுவலர் ரெங்கநாதன் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகளே புகார் கொடுத்து இருக்கிறார்கள். அதன்மீது இதுவரை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதோடு அரசியல் ரீதியாக எங்க தலைவரையும், எங்க இயக்கத்தையும் பற்றியும் அவதூறு பரப்பும் வண்ணம் வலைதளங்களில் செய்திகளை பதிவிட்டுள்ளார்.
இது சம்மந்தமாக சுகாதார அலுவலர் ரெங்கநாதன் மீது காந்திகிராம பல்கலை பதிவாளர் அவர்களிடம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அந்த சுகாதார அலுவலர் ரெங்கநாதன் மீது துறைரீதியாகவும், சட்டப்படியாகவும் நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும். தவறினால் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications