திண்டுக்கல் மாணவி ஹரிஷ்மாவுக்கு எமனாக மாறிய செல்போன்.. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சம்பவம்
திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் ஆனந்த ஈஸ்வரன். இவரது மகள் ஹரிஷ்மாவுக்கு 18 வயது ஆகிறது. இவர் திண்டுக்கல் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் ஹரிஷ்மாவை அவரது தாய் படிக்க சொல்லியிருக்கிறார். அத்துடன் செல்போன் கொடுக்க மறுத்துவிட்டாராம். இதனால் வேதனையில் மாணவி ஹரிஷ்மா செய்த செயல், மொத்த குடும்பத்தையும் கலங்க வைத்துள்ளது.
இன்றைய 2 கே கிட்ஸ் குழந்தைகளில் பலர், சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வாழ்வில் தவறான முடிவெடுக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர் முடிவெட்டிவிட்டு வா என்று கூறினால் அவமானம் என்று நினைகிறார்கள். பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து பெற்றோரை அழைத்து வா என்றால்.. அதுவும் அவமானம் என்று நினைக்கிறார்கள். நினைத்த போது ஊர் சுற்ற முடியவில்லை என்றாலும், தனது முடிவை பெற்றோர் ஏற்கவில்லை என்றாலும் மனம் உடைந்து போகிறார்கள்.

தாங்கள் பட்ட கஷ்டம், தங்கள் பிள்ளைகளுக்கு தெரியக்கூடாது என்று எண்ணி 80ஸ் பெற்றோர்கள் பார்த்து பார்த்து வளர்ப்பதால், அவர்கள் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள். இதனால் எல்லாமே எளிதாக கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் வாழ்வில் சவால்களை எதிர்கொண்டால், பிரச்சனைகளை எதிர்கொண்டால் எப்படி செயல்பட வேண்டும்.. அவமானங்களை எதிர்கொண்டால் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியாமல் பலர் தவறான முடிவெடுக்கிறார்கள்.. திண்டுக்கல்லில் பெற்றோர் செல்போன் தராததால் மாணவி ஒருவர் ஓடும் ரயில் முன்பு குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஸ்ரீநகரை சேர்ந்த ஆனந்த ஈஸ்வரன் என்பவருடைய மகள் ஹரிஷ்மா (வயது 18). இவர், திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அண்மையில் ஹரிஷ்மா வீட்டில் இருந்துள்ளார். செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தாயார் தமிழ்செல்வி ஹரிஷ்மாவை கண்டித்தார். மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நெருங்குவதால் படிக்கும்படி அறிவுறுத்தினாராம். அதோடு கடந்த சில நாட்களாக ஹரிஷ்மாவிடம் செல்போனை கொடுக்க மறுத்துவிட்டாராம்.
இதற்கிடையே நேற்று முன்தினம் ஹரிஷ்மா வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனக்கு செல்போனை தரும்படி தாயாரிடம் கேட்டுள்ளார். ஆனால் தாயார் தமிழ்செல்வி செல்போனை கொடுக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். செல்போன் கிடைக்காததால் விரக்தியில் இருந்த ஹரிஷ்மா, இரவு சுமார் 9 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். சுமார் 100 அடி தூரத்தில் இருக்கும் ரயில் தண்டவாளம் பகுதிக்கு ஹரிஷ்மா சென்றாராம். அப்போது தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்தது. உடனே ஹரிஷ்மா, அந்த ரயில் முன்பு பாய்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதில் ஹரிஷ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அங்கு இருந்த ஹரிஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ரயில் முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவி உயிரைவிட்ட சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications