கொடைக்கானல் ரொம்ப குளிருது கோவிந்தா.. முதல்வரின் பாதுகாப்பு பணியில் ‘போதை’ போலீசார்! அதிரடி ஆக்ஷன்!
திண்டுக்கல்: தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கொடைக்கானலுக்கு நான்கு நாள் சுற்றுலா வந்தனர். கொடைக்கானல் பாம்பர்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்த சூழலில், அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த 2 போலீசார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கொடைக்கானல் பாம்பர்புரம் பகுதியில் குடும்பத்துடன் சில நாட்கள் ஓய்வெடுத்தார்.

அவர் தங்கியிருந்த பாம்பர்புரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, அவர் தங்கியிருந்த தனியார் விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பல அடுக்குகளாக செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் மதுபோதையில் இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வரின் வாகன பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை கண்காணித்த முதல்வரின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள், அவர்கள் மதுபோதையில் இருந்ததை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக திண்டுக்கல் சரக துணை காவல்துறைத் தலைவரான சசிமோகனுக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அவரின் உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரில் இருவர் உடனடியாக தேனி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு காவலருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் மிகவும் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை. குறிப்பாக உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்படும் நபர்களின் பாதுகாப்பில் சிறிய தவறும் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரே மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் சம்பவம் போலீஸ் துறையில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் உண்மையில் மதுபோதையில் இருந்தார்களா, எவ்வாறு இந்த தவறு நடந்தது, பாதுகாப்பு நடைமுறைகளில் எங்கு குறைபாடு ஏற்பட்டது என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசாரே மது அருந்தியிருந்த சம்பவம், போலீஸ் துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications