அரசுப் பேருந்தில் லுங்கி டான்ஸ்.. போதை இளைஞர்களுக்கு.. அரங்கேற்றம் செய்து வைத்த போலீஸ்
திண்டுக்கல்: பொது இடங்களில் போதை ஆசாமிகள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதுக்கு இல்லையா யார் ஒரு எண்டு என்பது போல பொது மக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பேருந்தில் லுங்கியை தூக்கி ஆடி, வாந்தி எடுத்து, பயணிகளை தரக்குறைவாக திட்டி, தாக்கிய போதை இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்து, பொது இடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போதை ஆசாமிகளின் அட்ராசிட்டி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் ரூட்டு தலை என்கிற பெயரில் பேருந்துகளில் குத்தாட்டம் போடுவது, சாகசம் செய்வது உள்ளிட்ட பஞ்சாயத்துகள் தினம் தினம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பொது இடம் என்று கூட பாராமல் மது அருந்திக் கொண்டு அலப்பறை செய்து, அத்துமீறலில் ஈடுபடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் சேலம் - மதுரை வழித்தடம் பேருந்தில் மூன்று இளைஞர்கள் மதுபோதையில் ஏறியுள்ளனர். அவர்கள் போதையில் லுங்கி டான்ஸ் ஆடி, படிக்கட்டில் வாந்தி எடுத்து பயணிகளை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மதுரையில் இருந்து நேற்று மாலை சேலத்துக்கு அரசுப்பேருந்து புறப்பட்டுள்ளது. அந்தப் பேருந்து மாலை திண்டுக்கல் பேருந்து நிலையம் சென்றுள்ளது. அப்போது மூன்று இளைஞர்கள் மதுபோதையில் அந்தப் பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்கள் கரூர் செல்வதற்காக டிக்கெட் எடுத்துள்ளனர்.
மதுபோதையில் தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், வடிவேலு பாணியில் லுங்கியை தூக்கிக் கொண்டு டான்ஸ் ஆடியுள்ளனர். படிக்கட்டின் அருகேயே நின்று வாந்தி எடுத்துள்ளனர். பயணிகளையும் சொட்டை தலை என்று சொல்லி நக்கலடித்துள்ளனர். இதனால் பயணிகள் ஆத்திரமடைந்தனர்.
பேருந்து வேடசந்தூர் அருகே சென்றபோது, அவர்கள் மூன்று பேரும் இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் கேட்டு சண்டையிட்டுள்ளனர். அவர்களை கண்டித்த நடத்துனரையும் திட்டி தகராறு செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பேருந்தின் நடத்துநர் கூறுகையில், அந்த இளைஞர்கள் பேருந்தில் ஏறியதில் இருந்தே படிக்கட்டின் அருகே தான் நின்று கொண்டிருந்தனர். கரூருக்கு டிக்கெட் எடுத்துவிட்டு, வேடசந்தூரில் இறங்க வேண்டும் என ரகளை செய்தனர். அப்போது அவர்கள் பயணிகளை தாறுமாறாக அடித்தனர். என்றார்.
கடுப்பான பயணி ஒருவர் அதில் ஒரு போதை ஆசாமியை திருப்பி அடித்துள்ளார். போதை இளைஞர்கள் தொடர்ந்து பிரச்னை செய்யவே வேடசந்தூர் காவல்துறையிடம் புகார் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, போதை இளைஞர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்தனர்.
காவல்துறை அவர்களை விரட்டிப் பிடித்தனர். இதுகுறித்து போதை இளைஞர் தாக்கிய பயணி கூறுகையில், தினமும் வேலைக்கு சென்று கஷ்டப்படுகிறோம். இதுபோன்ற குடிகாரர்களால் நாங்கள் தான் சங்கடப்படுகிறோம். அவர்கள் என்னை ஓங்கி அடித்ததால் நானும் அடித்தேன். அவன் அடிக்கும்போது எப்படி சார் சும்மா இருக்க முடியும். இதுவே வயதான ஆட்களை அடித்தால் என்ன ஆவது.
ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்கள் தாங்கள் செய்தது தவறு தான் என்று ஒப்புக் கொண்டனர். காவல்துறை அந்த மூன்று இளைஞர்களையும் கடுமையாக கண்டித்தனர். தொடர்ந்து அந்த இளைஞர்களின் முகவரிகளை வாங்கிய போலீஸார், அவர்களை எச்சரித்து அறிவுரை சொல்லி அனுப்பினர்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பேருந்து பயணிகளிடம் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications