“மே 4க்கு பிறகு ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலிக்கும்” - சேகர்பாபு
திண்டுக்கல்: "மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலிக்கும்" என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற விவாதங்கள் நடந்து வரும் நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என உறுதியாகக் கூறியுள்ளார் சேகர்பாபு.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து பழனி கிரிவீதிகளில் உள்ள 4 அம்மன் கோயில்களிலும் தரிசனம் மேற்கொண்டார்.

சுவாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "வருகின்ற மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்ற குரல் ஒலிக்கும். ஸ்டாலின் மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்பார்." எனத் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் 85% வாக்குப்பதிவு நடந்துள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சேகர்பாபு, "கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தோடு தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால். பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை என்பது தெரியும். இதனால் தேர்தல் முடிவுகளில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது. திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்." எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் சூழலில், யார் வெற்றி பெறுவார் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தச் சூழலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications