சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. இனி ரேஷனில் நிம்மதி.. திண்டுக்கல் ரேசன் கடையில் அதிரடியை பாருங்க
திண்டுக்கல்: ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்குமே, பொருட்கள் முறையாக தங்குதடையின்றி வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன்கார்டுதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ஏராளமான அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது.. இதற்காகவே பணபரிவர்த்தனையையும் எளிமைப்படுத்தி, ரேஷன்தாரர்களின் சுமையையும் குறைத்திருக்கிறது.

ஆனால், ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதும், ரேஷன் கடைகளில் முறைகேடுகளும் நடந்தபடியே உள்ளது.. இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது.
குறிப்பாக, தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு, உணவு துறை பலமுறை உத்தரவிட்டும்கூட, அதை, பல ஊழியர்கள் சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகாரும் கிளம்பியது.. அதாவது அனைத்து பொருட்களும் வரவில்லை என்று சொல்லி, ஒரு நாள் அரிசி, மற்றொரு நாள் சர்க்கரை என்று அவரவர் விருப்பத்துக்கு தருகிறார்களாம். சில சமயம், கடையில் பொருள் இல்லை என்று ரேஷன்தாரரை திருப்பி அனுப்பியும் விடுகிறார்களாம்.
அதிகாரிகள்: இதுபோன்ற புகார்கள் இனி மீண்டும் எழக்கூடாது என்பதற்காகவே, சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு கடிவாளங்களை போட்டது.. அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் அதிரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவை பிறப்பித்தது.
அதேபோல, கட்டாய விற்பனை செய்வது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்ல, இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு புகார் கூறலாம் என்றும் அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புகார்கள்: இதையடுத்து, அதிகாரிகளும், ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு வருவதால், முறைகேடுகள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று திடீர் புகார் ஒன்று முளைத்துவிட்டது.. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல் வந்திருந்தார்..
அப்போது அமைச்சரிடம், பெண் ஒருவர், தங்கள் பகுதியான அத்திமரத்துவலசு ரேஷன் கடையில் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்று முறையிட்டார். இதைக்கேட்டதுமே அமைச்சர் சக்கரபாணி, அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கொழுமம்கொண்டான் ஊராட்சியிலுள்ள அத்திமரத்துவலசு ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றார்..
திடீர் ஆய்வு: அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் இருப்பு, அவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த கடையில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதையும் அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே உறுதிப்படுத்தினார். அத்துடன், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டு சென்றார்.
பெண் ஒருவர் புகார் சொன்னதுமே, நேரடியாகவே ரேஷன் கடைக்கு கிளம்பிவந்து அமைச்சர் மேற்கொண்ட இந்த அதிரடி ஆய்வானது, திண்டுக்கல் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ரேஷன் கடை ஆய்வு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications