பெண் கிடைக்காமல் தவித்த திண்டுக்கல் 90ஸ் கிட்ஸ்.. 'கமிஷன்' புரோக்கரால் மொத்தமாக காலியான கல்யாண கனவு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மணமகன், மணமகள் என இரு வீட்டாரிடமும் கார், பணம் என்று ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய புரோக்கர், ரூ.1 லட்சம் கமிஷன் தொகையுடன் தப்பி ஓடி விடிவிட்டார். நிச்சயதார்த்தம் நடந்த மண்டபத்தில் நடந்த சீட்டிங் பற்றி பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 29 வயதான நிதி நிறுவன அதிபருக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்காக பெண் பார்த்து கொண்டிருந்தனர். பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் அவருக்கு நடக்கவில்லை.

இதனால் அவரது குடும்பத்தினர், வேடசந்தூரில் உள்ள திருமண புரோக்கர் ஒருவரை அணுகி உள்ளனர். அவர் பல இடங்களில் பெண் பார்த்து வந்தார். கடைசியாக, வேடசந்தூரில் வசிக்கிற 23 வயதான பட்டதாரி பெண் ஒருவரின் குடும்பத்தினரை சந்தித்து புரோக்கர் பேசியுள்ளார்.
அப்போது மாப்பிள்ளை வீட்டார் நல்ல வசதியான குடும்பத்தினர் என்றும், பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும் கூறியதுடன், நிச்சயதார்த்தத்தின் போது பெண்ணுக்கு 25 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார் என்று மணமகள் வீட்டில் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதேபோல் மாப்பிள்ளை வீட்டாரிடம் மாப்பிள்ளைக்கு 10 பவுன் நகை, ரூ.10 லட்சத்தில் புதிய கார் ஆகியவற்றை பெண் வீட்டார் கொடுக்க உள்ளார்கள் என்று கூறி புரோக்கர் நம்ப வைத்துள்ளார். இரு வீட்டாரிடமும், புரோக்கர் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார். ஆனால் இதில் என்ன ஹைலைட் என்றால், நகை, பணம், கார் வழங்குவது தொடர்பாக மணமகன், மணமகள் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் நேரடியாக பேசிக்கொள்ளவில்லை. இதற்கு புரோக்கர் எந்த வாய்ப்பும் ஏற்படுத்தி தரவில்லை. இதற்கிடையே புரோக்கரின் சதி வேலை தெரியாமல் தடபுடலாக இருவீட்டாரும் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்தார்கள்.
அதன்படி வேடசந்தூரில் உள்ள ஒரு கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்திருக்கிறது. மணமகன், மணமகள் குடும்பத்தினர் சிலர் மட்டுமே பங்கேற்றனர். நிச்சயதார்த்தம் முடிந்ததும், இரு வீட்டாரும் திருமண தேதி குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது தான் புரோக்கரின் டுபாக்கூர் தனம் வெளிவந்திருக்கிறது.
அப்போது மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரை பார்த்து நிச்சயதார்த்தத்தின் போது பெண்ணுக்கு 25 பவுன் நகை போடுவதாக சொன்னீர்களே?, அது என்ன ஆச்சு என்று கேட்டுள்ளனர். இதனால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதேபோல் நிச்சயதார்த்தத்தின் போது 10 பவுன் நகை போடுவதாக நீங்கள் சொன்னீர்களே? அது என்ன ஆச்சு என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருவீட்டாரும் தாங்கள் அப்படி நகை, பணம், கார் பற்றி எதுவும் பேசவில்லை என்று மாறி மாறி கூறியிருக்கிறார்கள்.
இதனிடையே தனக்கு வேறு வேலை இருப்பதாக கூறி புரோக்கர் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்காமல் எஸ்கேப் ஆனார்.. அப்போது தான், இரு வீட்டாரும் புரோக்கர் பேச்சை நம்பி ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் பெண் பார்த்து கொடுத்ததற்காக ரூ.1 லட்சத்தை புரோக்கர் வாங்கியதாக மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர்.
கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, இருவீட்டாரையும் புரோக்கர் ஏமாற்றியது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் புரோக்கரை தொடர்பு கொண்டனர். அப்போது அவரது செல்போன் எண் 'சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. கமிஷன் தொகையுடன் அவர் தப்பி ஓடியது தெரியவந்தது. நிச்சயதார்த்தம் முடிவுற்ற நிலையில் இரு வீட்டாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போனார்கள் இதனிடையே பெண் வீட்டார் திருமணத்துக்கு மறுத்து விட்டார்கள்.
பல ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்காத பட்சத்தில், நிச்சயதார்த்தம் வரை வந்து கிடைத்த பெண்ணும் திருமணத்துக்கு மறுத்ததால் மாப்பிள்ளை கடும் விரக்தி அடைந்தார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் நொந்துபோனார்கள். திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவித்த 90ஸ் கிட்ஸ் மாப்பிள்ளைக்கு நடந்த இந்த சோக சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications