திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இரவில் அரசு பேருந்துகளில் வருவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
திண்டுக்கல்: திண்டுக்கல், தேனியில் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படும் அரசு பஸ்களை பயணிகள் விரும்பும் இடத்தில் நிறுத்த வேண்டும் என்று திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் சசிகுமார் உத்தரவிட்டுள்ளார். வெளியூர்களில் இருந்து வருபவர்கள், வெளியூர் சென்று திரும்புபவர்கள் பெரும்பாலும் இரவில் வரும் சில இடங்களில் நிறுத்தப்படவில்லை என்ற புகார் உள்ளது. இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 800-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர திண்டுக்கல், தேனியில் இருந்து மதுரை, சென்னை, கோவை, திருப்பூர், சேலம், நாகர்கோவில், காரைக்குடி, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பகலில் மட்டுமின்றி இரவிலும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகின்றன.

இரவில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலும் கோவை, திருப்பூரில் இருந்தே அதிக அளவில் வருகின்றன. அப்படி பல்வேறு வெளியூர்களில் இருந்து வருபவர்கள், பெரும்பாலும் இரவில் சொந்த ஊர் வருகின்றனர். அப்படி வருபவர்கள் திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-திருச்சி, திண்டுக்கல்-கரூர் வழித்தடங்களில் ஒருசில ஊர்களில் இரவு நேரத்தில் பஸ்கள் நிற்பதில்லை என்று பயணிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். நள்ளிரவில் பயணிகளை அவர்கள் விரும்பும் இடங்களில் இறக்கிவிட மறுப்பதால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே அடிக்க பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
மேலும் நள்ளிரவில் வேறு நிறுத்தங்களில் பயணிகளை இறக்கி விடுவதால் பெண்கள் அச்சப்படும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்களுக்கு, மண்டல பொது மேலாளர் சசிகுமார் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
அதில், நகர பஸ் வசதி இல்லாத இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, தொலைதூர புறநகர் பஸ்களை இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல வேண்டும். இதுபற்றி டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் பயணிகளிடம் இருந்து புகார் வராதவகையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். புகார்கள் வந்தால் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications