பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரோப் கார் சேவை இன்று ரத்து
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ரோப் கார் சேவை இன்று நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலைப் பயன்படுத்தி மலைக் கோயிலுக்குச் செல்லலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலின் பாதுகாப்பு, துப்புரவுப் பணி இந்து சமய அறநிலையத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இங்கு வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதேபோல, பண்டிகை தினங்கள் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும். நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.
பொதுவாக பழனி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் படிப் பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவையை மலைக் கோயிலுக்குச் செல்வதற்காக பயன்படுத்துவது வழக்கம். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதிலும், ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யானைப் பாதை, படிப்பாதை வழியாக நடந்து சென்றாலும், மின் இழுவை ரயில் வழியாக சென்றாலும் மலைக் கோவிலுக்கு செல்ல பத்து நிமிடம் ஆகும். ஆனால், ரோப் கார் மூலமாக மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலுக்கு செல்லலாம் என்பதாலும், கொடைக்கானல் மலையின் இயற்கை காட்சிகளை ரசித்து செல்லலாம் என்பதால் ரோப் கார் சேவையை பொதுமக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர்.
இந்த ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) பழனி ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இந்த மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்று பழனிக்கு வரும் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications