கட்சி வேலை பார்த்தது குத்தமாய்யா? தம்பி மகனுக்கே உள்ளடி வேலை பார்த்த சீனிவாசன்! ர.ர.க்கள் அதிருப்தி!
திண்டுக்கல்: அதிமுகவில் கூட்டணி விவகாரங்கள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க ஆங்காங்கே உட்கட்சி உள்குத்துகளால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல்லிலும் பிரச்சனை வெடித்திருக்கிறது. முன்னால் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் தனது தம்பி மகனுக்கு எதிராக வேலை செய்திருப்பதாக கூறி புலம்புகின்றனர் திண்டுக்கல் அதிமுக தொண்டர்கள். என்ன நடந்தது என விரிவாகப் பார்க்கலாம்..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார். கோவையில் தொடங்கிய பிரச்சாரம் விழுப்புரம், கடலூரை கடந்து அரியலூர் பகுதிக்கு வந்திருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க வரும் தேர்தலில் அதிமுக கரையேறுவது சிரமம் தான் என்கின்றனர் சீனியர் நிர்வாகிகள். காரணம் ஏற்கனவே பல அணிகளாக அதிமுக உடைபட்டு தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்றிருக்கிறார்.

அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கிடையேயான அதிகார மோதலால் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அலைக்கழித்து வருகின்றனர் என்கின்றனர். மதுரை போன்ற பெரிய நகரங்களிலும், திண்டுக்கல் போன்ற சிறிய நகரங்களிலும் இரண்டு மூன்று முன்னால் அமைச்சர்கள் இருப்பதால் கட்சிப் பணிகளை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை என்கின்றனர்/ மேலும் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை கூட நீக்குவது. மாற்றுவது. ஒன்றியங்களை பிரிப்பது என முன்னால் அமைச்சர்கள் அதிரடி என்ற பெயரில் அலங்கோலம் செய்து வருவதாக கூறுகின்றனர்.
அப்படி ஒரு விவகாரம் தான் திண்டுக்கல்லில் வெடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் ஒன்றியத்தை பிரிக்கிறேன் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்ட ஒன்றிய செயலாளருக்கான அதிகாரத்தை குறைத்துள்ளதாக புலம்புகின்றனர் அதிமுக தொண்டர்கள். அதுவும் தனது தம்பி மகனையே ஏன் இவ்வாறு செய்தார் என தெரியவில்லை என குமுறுகின்றனர்.
திண்டுக்கல் அதிமுகவை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் சீனிவாசனின் ஆதிக்கம் தான் இருந்தது. அதற்கு பிறகு நத்தம் விசுவநாதன் கோலோச்சினர். பின்னர் மீண்டும் கட்சியில் பலம் பெற்றார் முன்னாள் எம்பி ஆன சீனிவாசன், தேர்தலில் வெற்றி பெற்றதும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது திண்டுக்கல் மாநகரத்திற்கு மகன், ஒன்றியத்துக்கு தம்பி மகன் என பிரித்து கொடுத்தார்.
அப்படி திண்டுக்கல் ஒன்றிய செயலாளராக இருந்தவர் தான் ராஜசேகரன். திண்டுக்கல் ஒன்றியத்தை பொருத்தவரை ராஜசேகரன் செயலாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தபோதும் ராஜசேகரனின் பணியால் தான் திண்டுக்கல் சீனிவாசன் வெற்றி பெற முடிந்தது. கடந்த தேர்தலில் வெறும் 13 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் திண்டுக்கல் சீனிவாசன் வென்றார். அதில் 10 ஆயிரம் ஓட்டுகளை ஒன்றிய பகுதிகளில் இருந்து ராஜசேகரன் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தில் தேர்தலில் திண்டுக்கல் யூனியனை அதிமுக இழந்தாலும், கணிசமாக கவுன்சிலர்களைப் பெற ராஜசேகரன் தான் காரணம். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களை தனது சொந்த பணத்தை செலவு செய்து ஜெயிக்க வைத்தார். அது மட்டும் அல்லாமல் ஒன்றிய அளவில் மட்டுமல்லாது, மாநகர அளவிலும் கூட்டங்கள் நடத்துவது, கட்சியின் நிகழ்ச்சிகளை நடத்துவது என ஆர்வம் காட்டி வந்தார்.
கடந்த தேர்தலில் சீனிவாசனை விட ராஜசேகருக்கு தான் ஆதரவு இருப்பதாகவே கூறப்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பின்னணியில் திண்டுக்கல் சீனிவாசன் தான் இருக்கிறார் என்கின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.
இது தொடர்பாக அவர்களிடம் பேசியபோது," திண்டுக்கல் மாநகரை விட திண்டுக்கல் ஒன்றியத்தில் அதிமுக மிக வலுவாக இருந்தது. ஒன்றியம் தொடங்கி வார்டு வரை அனைத்து நிர்வாகிகளையும் ராஜசேகரன் ஒருங்கிணைத்துச் சென்றார். கட்சி வேலைகளை இழுத்து போட்டு செய்து வந்தார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது சொந்த பணத்தை போட்டு செலவு செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல் ஒன்றிய அளவில் நல்லது, கெட்டது என எது நடந்தாலும் முதலில் வருவது ராஜசேகரன் தான்.
இதனால் எதிர்க் கட்சியினர் கூட அவருக்கு மரியாதை கொடுத்து வந்தனர். இதனால் கிளைச் செயலாளர்கள் வரை உற்சாகமாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென திண்டுக்கல் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து தர்மராஜன் என்பவரையும், ராஜசேகரனையும் ஒன்றிய செயலாளர்களாக நியமித்துள்ளனர். 2026 தேர்தலை முன்னிட்டு இந்த ஏற்பாடு என்றாலும் தர்மராஜன் என்பவரை யாருக்குமே தெரியாது.
ஊராட்சி மன்ற தலைவர் அணி கணவர் என்பதை தவிர அவருக்கு எந்த அரசியலும் தெரியாது. ஆனால் ராஜசேகரன் அப்படி அல்ல. கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்தும், அதனை விட்டுக் கொடுத்து பணியாற்றினார். மேலும் ஒன்றியம் மட்டும் அல்லாது நகரப் பகுதிகளிலும் செலவு செய்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஆனால் தன்னை விட, தன் மகனை விட தம்பி மகனுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக திண்டுக்கல் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து விட்டனர். இதனால் நிர்வாகிகளும் உற்சாகம் இழந்துள்ளோம். வரும் தேர்தலில் திண்டுக்கல்லில் அதிமுக தேறுவது மிக கஷ்டம்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications