உழைக்க பாலினம் பொருட்டல்ல.. கட்டை விரலை உயர்த்திச் சொல்லும் திண்டுகல்லின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர்!
திண்டுக்கல்: நம்மால் முடியாது நமக்கேன் வம்பு என பெண்கள் இருந்த காலம் மாறி தற்போது பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.. அந்த வகையில் ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டும் தொழிலில், திண்டுக்கல்லில் தனி ஒரு ஆளாக 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார் பெண் ஒருவர் .. மகளிர் தினத்துக்காக அவரிடம் சிறப்பு பேட்டி எடுத்துள்ளது ஒன் இந்தியா தமிழ்.
சைக்கிள் கூட சரியா ஓட்டத் தெரியாத நான், இன்னைக்கு ஆட்டோ ஓட்டுறேன்னா அதுக்குக் காரணம் என்னோட தன்னம்பிக்கை. ஆண்களோட வருமானத்தை மட்டும் எதிர்பார்க்காம பெண்களும் சொந்தக் காலில் நிற்கணும்" எனக் கட்டை விரல் உயர்த்திச் சொல்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர் லட்சுமி பிரியா..

சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண்களை ஆங்காங்கே பார்க்க முடியும். சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் ஆட்டோ ஓட்டும் பெண்களைப் பார்ப்பது அரிது தான். ஆண்களுக்கு நிகராக எத்தனையோ துறைகளில் முன்னேறி வருகின்றனர் பெண்கள்.
ஆனால், ஆண்களின் வசம் இருக்கும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் குறிப்பிடத்தக்க வகையில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் இருப்பதற்குக் காரணம், இத்தொழிலில் உள்ள சிரமங்களும் பாதுகாப்பற்ற சூழலும்தான். இந்நிலையில், திண்டுக்கல்லில் தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டிவருகிறார் திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த லட்சுமி பிரியா . திண்டுக்கல்லில் முதல் பெண் ஆட்டோ டிரைவரும் இவர் தான்.

குடும்ப சூழல் காரணமாக ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரது சகோதரரின் ஆலோசனைப் படி ஆட்டோ ஓட்டும் தொழிலை தேர்ந்தெடுத்தார் லட்சுமி பிரியா .. முதலில் பள்ளி குழந்தைகளை மட்டும் ஏற்றிச் சென்று பள்ளியில் விட்டு வந்த அவர், பின்பு செலவுகளை சமாளிக்க பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் தயக்கத்துடன் ஆட்டோ ஓட்டி பழகிய லட்சுமி பிரியா, தொடர்ந்து முறையான உரிமம் பெற்று தற்போது வரை 15 ஆண்டுகளாக ஆட்டோ இயக்கி வருகிறார். பொதுவாக ஆண்கள் மட்டுமே இயக்கும் ஆட்டோக்களில் ஏற பெண்கள் தயங்கிய சூழ்நிலையில் லட்சுமி பிரியாவின் ஆட்டோவில் ஏறுவதற்கு பெண்களும் அதிக ஆர்வம் காட்டினர் .

இதன் காரணமாக தற்போது வரை வெற்றிகரமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறும் லட்சுமி பிரியா சாதனை, புரிய வேண்டும் அல்லது உழைக்க வேண்டும் என்பதற்கு பாலினம் பொருட்டல்ல.. பெண்கள் ஏதாவது ஒரு துறையில் தங்கள் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் எனவும் இறுதி மூச்சு உள்ளவரை தான் ஆட்டோ ஓட்டுவேன் என்று உறுதியுடன் கூறுகிறார்.

திண்டுக்கல்லின் முதல் ஆட்டோ பெண்மணியான அவரை வாழ்த்துவதில் ஒன் இந்தியா தமிழ் பெருமை கொள்கிறது.












Click it and Unblock the Notifications