Exclusive: டோக்கன் கிடைக்கல சார்.. ஐபிஎல்லை விஞ்சிய 'கார்ப்பரேட்’ ஜல்லிக்கட்டு! குமுறும் வீரர்கள்!
திண்டுக்கல்: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் காளைகளும் காளையர்களும் களம் காண்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் டோக்கன் பதிவு முறையே ரத்து செய்வதோடு கார், புல்லட் போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்களை வழங்கி ஜல்லிக்கட்டு போட்டியை அழிவிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் ஐபிஎல் போட்டிகள் போல கார்ப்பரேட் மயமாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டாலே தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் களத்தில் இறங்கி வீரர்களை பந்தாடுவதற்காக காளைகளும் காளைகளை தழுவுவதற்காக வீரர்களும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு,அவனியாபுரம் உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு மிக பிரம்மாண்டமாக நடைபெறும் .அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பிள்ளமநாயக்கன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கொசுவபட்டி, தவசிமடை, உலகம்பட்டி,மறவபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெறும்.

ஜல்லிக்கடு காளைகள் தயார்:
இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞர்கள் வளர்த்து வருகின்றனர். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் விதமாக காளைகளுக்கு உணவு முதல் உடற்பயிற்சி வரை தினசரி எந்த குறையும் வைப்பதில்லை காளைகளின உரிமையாளர்கள். அன்றாடம் தின கூலிகளாக வேலைக்குச் செல்லும் நிலையில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தில் சுமார் 300 ரூபாய் வரை ஜல்லிக்கட்டு காளைக்கு செலவு செய்கின்றனர்.

காளைகளுக்கு சிறப்பு உணவுகள்:
அந்த வகையில் இரவு நேரங்களில் பருத்தி விதையை ஊறவைத்து அவற்றை காலையில் தண்ணீரோடு கலந்து வைப்பது மட்டுமின்றி புண்ணாக்கு, உளுந்தம் குருணை, பச்சரிசி தவிடு, பச்சைப்புல் உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துமிக்க உணவுகளை தினசரி காளைகளுக்கு வழங்கி அழகு பார்க்கின்றனர் காளைகளின் உரிமையாளர்கள். அதோடு மட்டுமின்றி காளைகளின் கால் வழு பெறுவதற்காக காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் காளைகளுக்கு நடை பயிற்சி மேற்கொள்வது, மாடுபிடி வீரர்கள் திமிலை அடக்க முயலும் போது லாவகமாக வீரர்களை தூக்கி எறிய மண் குத்தும் பயிற்சி, நீண்ட நேரம் காளைகள் வரிசையில் நிற்பதை மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க முயலும் போது திடமாக இருக்க மூச்சுப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்து அவற்றில் இருந்து காளையை அவிழ்த்து விட்டு வீரர்களை முட்ட விடும் பயிற்சி என பல்வேறு வகைகளில் காளைகளின் வீரத்தை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர் பில்லம நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள்.

வாடிவாசல்:
வாடி வாசலில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஈடு கொடுக்க நாங்களும் தயார் என்ற வகையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் மாடு பிடி வீரர்கள். அந்த வகையில் கபடி போட்டி என்பது காளைகலை குறிவைத்து அடக்குவதற்கு மிகுந்த உதவியாக மாடு வீரர்களுக்கு இருந்து வருகிறது. அது மட்டும் இன்றி தினசரி பல்வேறு வகையான உடற்பயிற்சி வாடிவாசல்களில் ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து வட்டு அவற்றை அடக்கம் பயிற்சி என நாங்களும் சலித்தவர்கள் அல்ல என்ற வகையில்
மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாடு உரிமையாளர்கள் வேதனை:
இதனிடையே ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் முத்துராஜா என்பவர் கூறுகையில்," தற்பொழுது ஆன்லைன் டோக்கன் நடைமுறையால் தங்களைப் போன்ற உரிமையாளர்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்தும் டோக்கன்கள் கிடைப்பதில்லை. காரணம் பெயரளவுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய விட்டு பின்னர் தங்களுக்கு தேவைப்பட்ட நபர்களுக்கு அரசியல் பின்புலம் உள்ள நபர்களுக்கும் டோக்கன்களை விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் இரண்டு வாடி வாசலில் கூட தங்கள் காளைகளை அவிழ்த்து விட மாட்டோமோ என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். காளைகளின் உரிமையாளர்கள். எனவே தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் டோக்கன் பதிவு முறை ரத்து செய்து நேரடி டோக்கன் பதிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

அரசியலாக மாறும் ஜல்லிக்கட்டு:
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறந்த மாடுபிடி வீரர் சிறந்த மாடு என அறிவிப்பதால் தற்பொழுது பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியானது அரசியலாக மாறுவது மட்டுமல்லாமல், ஐபிஎல்லை போல கார்ப்பரேட் போட்டியாக மாறி பாரம்பரியத்தை இழந்து அழிவை நோக்கி சென்று வருவதாக கவலை தெரிவிக்கிறார்

இழப்பீடு இல்லை:
மாடுபிடி வீரர் சுந்தர் கூறுகையில், காளை முட்டி உயிரிழக்கும் வீரர்கள் எவருக்கும் தற்போது வரை இழப்பீடு என்பது வழங்கப்படவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டில் பதிவு செய்யப்படும்போது தங்களிடமிருந்து 200 ரூபாய் இன்சூரன்ஸ் பணம் என்று வசூல் செய்யப்படுகிறது. ஆனால் அவற்றை முறையாக காயம் படும் வீரர்களுக்கு அல்லது ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் நபர்களுக்கும் அரசு தற்போது வழங்கவில்லை. ஆகையால் காளை முட்டி உயிரிழக்கும், கூலி தொழிலாளிகளின் குடும்பம் மிகுந்த சிரமத்தை அடைந்து வருகின்றனர்" என வேதனை தெரிவிக்கின்றனர்.













Click it and Unblock the Notifications