கொடைக்கானல் கலரே மாற போகுது.. சுற்றுலாப் பயணிகளுக்கு சர்ப்ரைஸ்.. வருது ரோப்கார்! ரெடியான அதிகாரிகள்!
திண்டுக்கல்: கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை சாலை மார்க்கமாக மட்டுமே கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இனி வான் மார்க்கமாக செல்லலாம். கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து தேனி மாவட்டம் கும்பக்கரை அருவிவரை ரோப் கார் திட்டம் செயல்படுத்த ஆலோசனை தீவிரமாக நடைபெற்ற நிலையில், தற்போது அதிகாரிகள் சாத்தியக்கூறுகள்குறித்து ஆலோசித்துள்ளனர். விரைவில் இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கி வரும் கொடைக்கானல் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வரவேற்று வருகிறது. 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் இந்த மலைநகரில் இயற்கை அழகு, குளிரான காலநிலை, சுற்றுப்புறச் சுத்தம் என்பன சுற்றுலா பயணிகளை கவர்கின்றன.
குறிப்பாக வார இறுதி மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்து விடுகிறது. இப்படி ஆண்டுக்காண்டு மக்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால், கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

கொடைக்கானல் போக்குவரத்து நெரிசல்
தற்போது கொடைக்கானலுக்கு பழனி வழி மற்றும் வத்தலக்குண்டு வழி என இரண்டு மலைப்பாதைகள் இருந்தாலும், அவை இரண்டும் மிகவும் நெரிசலானவையாக மாறியுள்ளன. மேலும் கும்பக்கரை - அடுக்கம் - கொடைக்கானல் பாதை இருந்தாலும், அங்கு இலகுரக வாகனங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நெரிசல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், அங்கு வசிக்கும் பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
கொடைக்கானல் ரோப் கார்
இந்தப் பிரச்சினையை குறைக்கவும், சுற்றுலாவை மேலும் மேம்படுத்தவும் புதிய திட்டங்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து தேனி மாவட்டம் கும்பக்கரை அருவிவரை ரோப் கார் (Cable Car) திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அதாவது பயணிகள் கும்பக்கரையிலிருந்து வட்டக்கானல் வரை காற்றில் தொங்கும் கேபிள் கார்கள் மூலம் பயணம் செய்யும் வசதி ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
தமிழக சுற்றுலா திட்டம்
இந்தத் திட்டம் சாத்தியமா? எங்கே தொடங்கி எங்கே முடிக்கலாம்? எந்த இடங்கள் வனப்பகுதியாக உள்ளன? வருவாய் நிலங்கள் எங்கே? போன்ற விஷயங்களை ஆராய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டம் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ கார்ப்பரேஷன் தலைவர் சித்திக் தலைமையேற்றார். பல துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் ரோப் கார் அமைக்கப்பட உள்ள பாதை, இடத் தேர்வு, தொழில்நுட்ப ஆய்வுகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் போன்ற அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும் இந்தத் திட்டத்துக்கான தொழில்நுட்ப ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மலைப்பாதை நெரிசல்
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும், மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும், கும்பக்கரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் பயண நேரம் குறையும், பயணிகள் ஒரு புதிய அனுபவத்தை பெறுவார்கள், என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரோப் கார் திட்டம் சுற்றுலா வளர்ச்சியுடன் இணைந்து, உள்ளூர் மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப்பகுதி அனுமதி, சட்ட அனுமதிகள் உள்ளிட்ட அனைத்தும் சரிவர ஆய்வு செய்யப்பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications