பொங்கல் பரிசுத் தொகுப்பில் 100 கிராம் ஆவின் நெய்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு
பழனி: பொங்கல் பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பழனியில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது கூறினார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது : பால்வளத் துறையில் கொள்முதல் செய்த பாலுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பரிசுப்பொருட்கள் தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் 100 மில்லி ஆவின் நெய்யும் வழங்கப்படும் என்று பாலவளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டால்தான் அங்கம் வகிக்க முடியும்.
நவபாஷாணம்
பழனி முருகன் நவபாஷாண சிலையை செய்த சித்தர் போகரை 5200 ஆண்டுகள் ஆனபிறகும் மறக்காமல் வழிபடுவது போல, ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர் எம்ஜிஆரை மறக்காமல் அரசியலுக்கு வரும் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என்றுதான் சொல்வார்களே தவிர கருணாநிதி ஆட்சி அமைக்கிறோம் என்று சொல்லமாட்டார்கள்.
உடல்நிலை
மேலும் நடிகர் ரஜினிகாந்த் போல வெளிப்படைத்தன்மை உள்ள நல்ல மனிதர் யாரும் இல்லை. அவரது உடல்நிலை மற்றும் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவர் அரசியலில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவை மனதார ஏற்கிறேன். ரஜினிகாந்த் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீண்டநாள் வாழ வேண்டும். அவர் அரசியிலுக்கு வராவிட்டாலும் ஆன்மீக வழியில் நடக்கும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் யாரும் ஆன்மீகத்தை விமர்சனம் செய்து, கேலியும் கிண்டலும் செய்யும் திமுகவிற்கு எக்காலத்திலும் வாக்களிக்க மாட்டார்கள்.
திமுக
தெருக் குழாயடியில் பெண்களுக்கு உள்ளே வரும் சண்டையில் நல்ல குடும்பத்து பெண் மீது தவறான நடவடிக்கை உள்ள பெண் தவறாக குற்றம்சாட்டி பேசுவது எப்படியோ அதுபோல இருப்பதை எல்லாம் சுருட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பற்றி குற்றம்சாட்டி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். திமுகவிற்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள். இனி திமுக ஆட்சி வரவே வராது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.