டமார்.. திண்டுக்கல்லை திணற வைத்த வெடி சத்தம்! அதிகாரிகள் காது மட்டும் கேட்காதா? கொதிக்கும் மக்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே நெஞ்சை பதற வைக்கும் வகையில் அடிக்கடி வெடிச் சத்தம் கேட்டு வருகிறது. நேற்று இரண்டு முறையும் இன்று ஒரு முறையும் மிகப்பெரிய அளவிலான வெடிச் சத்தத்தோடு சில இடங்களில் அதிர்வும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருக்கும் நிலையில் அதிகாரிகள் காதுக்கு மட்டும் வெடிச் சத்தம் கேட்கவில்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
தென் மாவட்டங்களில் நுழைவாயிலாக திண்டுக்கல் மாவட்டம் இருக்கிறது. முழுக்க முழுக்க மலைப் பகுதிகளுக்கு நடுவே இந்த மாவட்டம் அமைந்து இருக்கிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாகவும் திண்டுக்கல் இருக்கிறது.

பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் என மாவட்டத்தின் பல பகுதிகள் மலை சூழ்ந்த பகுதிகளாகவே இருக்கிறது. விவசாயம் இங்கு பிரதான தொழிலாக இருக்கும் நிலையில் கொடைக்கானல், பழனி போன்ற புகழ்பெற்ற சுற்றுலா தலங்களும் இருக்கின்றன.
இது ஒரு புறம் இருக்க கடந்த சில வருடங்களாகவே திண்டுக்கல் மக்கள் அடிக்கடி பீதிக்குள்ளாகி வருகின்றனர. நத்தம், வேடசந்தூர், எரியோடு, உள்ளிட்ட பல பகுதிகளில் கனிம வளங்கள் இருப்பதாக பீதி கிளப்பப்பட்ட நிலையில் அடிக்கடி அங்கு போர் விமானங்கள் சுற்றி வந்தன. மேலும் திடீர் திடீரென வெடிச் சத்தமும் கேட்டு வந்தது. ஆனால் இது தொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகமோ விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில், சில நாட்கள் வெடிச் சத்த தொல்லை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் தற்போது மிகப் பெரிய அளவிலான வெடிச் சத்தமும்., நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை, நத்தம்,எரியோடு, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மேலும் நில அதிர்வும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வீடுகளில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் உள்ளிட்டவையும் அதிர்ந்தன. வேடசந்தூர் அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிமெண்ட் கூரை பெயர்ந்தும் விழுந்தது. மேற்கூறையில் விரிசலும் ஏற்பட்டதால் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதே நேரத்தில் இடைவேளை நேரம் என்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டு வரும் நிலையில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுவர்களில் விரிசலும் விழுந்து இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 100 முறையாவது ஊடகங்களில் செய்தியும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதிகாரிகள் இதுவரை வாய் திறக்கவில்லை. ரெட்டியார்சத்திரம், எரியோடு உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு விதிமுறைகளை மீறி பல மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டி பாறைகள் வெட்டி எடுக்கப்படுகிறது. மிக அதிகமான ஆழத்தில் வெடி வைப்பதால் இதுபோன்ற வெடிச் சத்தம் கேட்கிறதா என்ற குழப்பமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களில் மூன்று முறை மிகப்பெரிய அளவிலான வெடிச் சத்தமும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு மட்டும் காது கேட்கிறது. அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் காதுகளுக்கு கேட்கவில்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் என்ன நடக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றனர் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications