நவராத்திரி திருவிழா.. பழனியில் தண்டாயுதபாணி கோவிலில் தங்க ரதம் இழுக்க போறீங்களா
திண்டுக்கல்: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 15 ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில்.

இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், தேரோட்டம் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இதுதவிர வார நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் முருகனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இத் திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் பழனி முருகன் கோயிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா வரும் 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயில் மலை மீது தினமும் நடைபெறக்கூடிய தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்க ரதப் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். கட்டணம் செலுத்தும் பக்தர்கள் தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தங்க ரதம் இழுக்கும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாத தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி பண்டிகை தொடங்க உள்ள அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், 24 ஆம் தேதி முதல் வழக்கம் போல தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications