பேரூருக்கே இப்படியா? 3000 பேருக்கு கிடா விருந்து..கரண்டி ஆம்லேட்,சிக்கன்65! மிரளவிட்ட திமுக செயலாளர்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக பேரூர் செயலாளராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜோசப் கோவில் பிள்ளை கிடா வெட்டி ஊரையே கூட்டி 3000 பேருக்கு விருந்து வைத்துள்ள தகவல் தான் தற்போதைய பேசு பொருளாக இருக்கிறது.
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
இதுவரை பேரூர், நகரம், ஒன்றிய பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
அன்றே கணித்த ஓபிஎஸ்! அதிமுகவில் அணி தாவிய ’திண்டுக்கல்’ நிர்வாகிகள்! இன்னும் லிஸ்ட் நிறைய இருக்காம்!
திமுக உட்கட்சி தேர்தல்
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக பேரூர் செயலாளராக புதிதாக ஜோசப் கோவில் பிள்ளை என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3000 பேருக்கு விருந்து வைத்துள்ள தகவல் தான் தற்போதைய பேசு பொருளாக இருக்கிறது. ஜோசப் கோவில் பிள்ளை நிலக்கோட்டை பேரூராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்ட நிலையில், பேரூராட்சி துணைத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஆனால் அப்பதவி கிடைக்கவில்லை.
பேரூர் செயலாளர்
இதனையடுத்து தேர்தலில் ஜோசப் வெற்றிக்காக மார்நாடு கருப்பணசாமி கோவிலில் கிடா வெட்ட ஜோசப் ஆதரவாளர்கள் தயாராகினர். அப்போது பொறுமையாக இருக்கச் சொன்ன ஜோசப் கோவில் பிள்ளைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக பேரூர் செயலாளர் பதவி வழங்கினார். இதனால் பல மடங்கு மகிழ்ச்சியான ஜோசப் நேர்த்திக்கடனோடு சேர்த்து நன்றி கடன் செலுத்தும் விதமாக மார்நாடு கருப்பண்ணசாமி கோவிலுக்கு 25 கிடாக்களை வெட்டி விருந்து படைத்தார்.
3000 ஆயிரம் பேர்
அங்கு திமுக ஒன்றிய செயலாளர் முருகன், மணிகண்டன், சௌந்திரபாண்டியன், பேரூர் செயலாளர்கள் விஜி, சின்னத்துரை, பேரூராட்சி தலைவர்கள் சிதம்பரம், சுபாஷினி மட்டும் அல்லாமல் தொகுதி முழுவதும் முக்கிய பிரமுகர் மற்றும் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் மற்றும் தனது வார்டு பொதுமக்கள் என மூன்று ஆயிரம் பேரை அழைத்து வந்து சிக்கன் 65, கரண்டி ஆம்லெட், கிடா கறி கூட்டு, குடல் குழம்பு என வகை வகையான அசைவ உணவுகளை மூன்றாயிரம் பேருக்கு பரிமாறி அசத்தல் விருந்து கொடுத்துள்ளார்.
திமுக நிர்வாகிகள்
பேரூர் செயலாளர் கிடைத்த சந்தோஷத்தில் ஜோசப் கோவில் பிள்ளை கொளுத்தி போட்ட இந்த விருந்து தீ மாவட்டம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியுள்ளது. அண்ணே நீங்க எப்ப விருந்து போட போறீங்க என புதிதாக பொறுப்பேற்றுள்ள மற்றும் இருப்பை தக்க வைத்துள்ள ஒன்றிய, நகர செயலாளர்களை அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கேட்க தொடங்கியுள்ளனர். என்ன இருந்தாலும் விருந்து கண் முன்னாடி வந்து போகுமா இல்லையா?