பழனியிலே இருக்கும் கந்த பழம்.. முருகப் பெருமானுக்கு இன்று தைப்பூச திருக்கல்யாணம்! நாளை தேரோட்டம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் இன்று இரவு 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் நடக்க உள்ளது. நாளை மாலை 4:45 மணிக்கு தைப்பூச தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கிறது. இதனையொட்டி பழனியில் பாதுகாப்பு பணியில் 3000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி இருக்கிறது. முருகப் பெருமானுக்கு உகந்த முக்கிய தினங்களில் ஒரு படை வீட்டில் சிறப்பாக கொண்டாடப்படும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் போல பழனியில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச திருவிழா திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே தைப்பூச சீசன் தொடங்கிய நிலையில் கடந்த 5ஆம் தேதி தைப்பூசம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடக்கிறது. 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானை சமேதராக முத்துகுமாரசாமி ரத வீதிகளில் வலம் வருகிறார். தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை மாலை 4.45 மணிக்கு ரத வீதிகளில் நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. தற்போது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் திண்டுக்கல் - பழனி, தாராபுரம் பழனி, உடுமலை சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் யானை பாதை வழியாக மலை மேலே ஏறுவதற்கும் படிப்பாதை வழியாக கீழே இறங்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையங்களை பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
அதிக கூட்டம் காரணமாக திருப்பதி மலை போல சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருக்கும் நிலையில் நாளையும் நாளை மறுநாளும் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், தன்னார்வலர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் சார்பில் அன்னதானமானது வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோவை, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறை வீரர்களும் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இடும்பன் குளம், சண்முக நதி ஆகியவற்றில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ரப்பர் படகு மூலம் பக்தர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications