நாங்க யாரு தெரியுமா? ரோட்டில் அலறி துடித்து ஓடிய பெண்கள்.. வீடியோ எடுத்த இளைஞர்கள்! கொடைக்கானல் ஷாக்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மசாஜ் செண்டரில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களால் அப்பெண்கள் சாலையில் ஓடியுள்ளனர். இதனையடுத்து சாலையில் அவர்களை ஓடவிட்டு வீடியோ எடுத்த இளைஞர்களை, கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இன்று சென்னையில் இருந்து நான்கு இளைஞர்கள் தனி வாகனம் மூலம் சுற்றுலா வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று அந்த இளைஞர்கள் அண்ணா சாலை பகுதியில் அரசு அனுமதி பெற்று இயங்கிவரும் கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவரின் மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த சென்னையை சேர்ந்த இளைஞர்கள் மசாஜ் செய்த பெண்களை அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மசாஜ் விடுதியின் உரிமையாளர் சதிஷுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவரிடம் சென்னை இளைஞர்கள் மசாஜ் விடுதி செயல்பட உங்களிடம் அனுமதி உள்ளதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து மசாஜ் விடுதி உரிமையாளர் நான் முறைப்படி அரசு அனுமதியுடன் தான் இந்த மசாஜ் விடுதியை நடத்தி வருகிறேன், நீங்கள் யார் என கேட்ட போது ஒருவர் ரிப்போர்ட்டர் என்றும், மற்றொருவர் போலீஸ் எனவும் மூன்றாவது நபர் நான் வக்கீல் என தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயந்து போன பணி பெண்கள் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது அவர்களை தனது செல் போனில் படம் பிடித்தபடியே அவர்களை மிரட்டி நாங்கள் சொல்வதை செய்யவேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என கூறி கதவை திறக்கவிடாமல் தடுத்துள்ளனர்.
இதில் அந்த சென்னை இளைஞர்களுக்கும் , மசாஜ் சென்டர் பணி பெண்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்து, எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையில் பயந்து ஓடி உள்ளனர். இருந்த போதும் அந்த பெண்களை விடாமல் அந்த இளைஞர்கள் பின் தொடர்ந்து வீடியோ எடுத்தபடியே சுமார் 500 மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து அந்த பெண்கள் தங்கி இருந்த குடியிருப்பு வீடு வரை சென்றுள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போது மீதம் இருந்த சென்னை இளைஞர்கள் நாங்கள் பத்திரிகையாளர்கள் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அவர்களை பிடித்து அருகே இருந்த காவல் நிலையத்தில் இங்குள்ள செய்தியாளர்கள் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை பிடித்து விசாரித்த போது சென்னையை சேர்ந்த ஆர்யா , திவாகர், பிரேம் எனவும், திருவண்ணாமலையை சேர்ந்த சாலமோன் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மசாஜ் விடுதியின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த நான்கு பேர் மீது வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் உட்பட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்கள் மீது வேறு ஏதும் வழக்கு நிலுவையில் உள்ளதா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications