என் அளவுக்கு நீ அரசியல் பேசி இருக்கிறாயா?.. விஜய்க்கு பிரகாஷ்ராஜ் சரமாரி கேள்வி
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஜய் வருகை இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. விஜய் மீது பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்படுகிது. என் அளவுக்கு நீ அரசியல் பேசி இருக்கிறாயா என்று விஜய்க்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பழனியில் நடிகர் பிரகாஷ்ராஜ் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டிற்கு தேர்தல் நேரத்தில் இவ்வளவு பெரிய துரோகத்தை செய்வார்கள். எடப்பாடியும் மற்ற அடிமை கட்சிகளும் வாயை மூடி நிற்கிறார்கள். இந்த அடிமை மாடல் நமக்கு தேவையா. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரையை இன்னொரு மணிப்பூராக்கிவிட்டு பழனிக்கு வருவார்கள். இந்துக்களை வைத்து அதிகாரம் பெற பார்க்கிறார்கள்.

என் அளவுக்கு அரசியல் பேசியிருக்கிறாயா
சினிமா மாடல் என்கிறிருக்கிறது. ஒரே சினிமாவில் பணம், பெயர், புகழ் எல்லாம் சம்பாதித்துவிடலாம். சினிமாவில் நீ டாக்டர், இன்ஜினியர் ஏன் முதல்வர் கூட ஆகலாம். ஆனால் அரசியலில் அப்படியே முதல்வராகிவிட முடியாது. என் அளவுக்கு அரசியல் பேசியிருக்கியா நீ. தமிழ்நாட்டிற்கோ, மொழிக்கோ, தன்மானத்திற்கோ பிரச்சனை வந்தபோது நின்றிருக்கிறாயா.
உங்கள் மீது மக்கள் வைத்துள்ள அன்பு, நட்பு உங்களின் சினிமா திறமைக்கானது. அரசியலுக்காக இல்லை. வீட்டை பற்றி யோசிக்காமல் வேலையைவிட்டு, வெயிலில் கட்அவுட் வைத்து, கால் கடுக்க நின்று காட்டிய அன்பை உங்கள் அரசியலுக்கு பயன்படுத்துகிறீர்களா. நடிகனை பிடித்தால் 3 விரல்களை பிடித்து விசில் அடிக்கலாம். அதற்காக நாட்டை எல்லாம் ஆள கொடுக்க முடியாது.
எந்த மாடல் வேண்டும்
அரசியல் வேறு, சினிமா வேறு. அந்த அன்பு வேறு. இந்த அன்பு வேறு. அதற்கு இறங்க வேண்டும். பேச வேண்டும். சீமான் 10 வருடங்களாக இறங்கி மக்கள் அரசியலை பேசி கொண்டிருக்கிறார். பெரிய நடிகர்களுக்கு இது எல்லாம் ஆகாது. உங்களுக்கு அடிமை மாடல் வேண்டுமா, சினிமா மாடல் வேண்டுமா, திராவிட மாடல் வேண்டுமா.
மக்கள் தான் அரசியல் செய்ய வேண்டும். வெற்றி பெற்றவர்கள் மக்கள் பணி செய்ய வேண்டும். நம் நாட்டில் அது தலைகீழாக உள்ளது. எந்த அணி நம்முடன் இருக்கும். தமிழுக்காக எந்த அணி துடிக்கும் என்று சிந்திக்க வேண்டும். இது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே நடக்கும் தேர்தல் அல்ல. விஜய் சொல்வதை போல தவெக - திமுக இடையேயான தேர்தல் இல்லை.
இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையே நடக்கும் தேர்தல். தமிழ்நாடு இந்தியாவுக்கே உதாரணமான மாடலாக நின்றுள்ளது. அதை இந்த தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். ஒற்றுமையா அல்லது பிரிவினையா என்று யோசித்து முடிவு செய்யுங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications