உடம்பு சரியில்லை! மாவட்டச் செயலாளர் பதவி வேண்டாம்! டிடிவிக்கு ஷாக் தந்த திண்டுக்கல் ராமுத்தேவர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக இருந்த ராமுத்தேவர், தனது உடல்நிலையை காரணம் கூறி கட்சிப் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
ராமுத்தேவர் இடத்துக்கு புதிய நபரை நியமனம் செய்வதற்கான தேடலில் ஈடுபட்டுள்ள டிடிவி தினகரன், கே.பி.நல்லசாமியை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அமமுக பொறுப்பாளராக நியமித்துள்ளார்.
ராமுத்தேவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டது குறிபிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023: அதிமுக கூட்டணி வாக்குகளை பங்கு போடுகிறதா அமமுக.. முடிவு நாளை?
அமமுக நிர்வாகிகள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், திண்டுக்கல்லில் மாவட்டச் செயலாளர் ராமுத்தேவர் தனக்கு கட்சிப் பதவி வேண்டாம் எனக் கூறி ராஜினாமா செய்திருக்கிறார். டிடிவி தினகரன் மீதான அதிருப்தியை அவர் வெளிப்படையாக வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் தனது உடல்நிலை கட்சிப்பணியாற்ற ஒத்துழைக்கவில்லை என நாகரீகமாக காரணம் கூறியிருக்கிறார்.
ராமுத்தேவர்
மாவட்டச் செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறிய ராமுத்தேவரை டிடிவி தினகரன் அழைத்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அவர் வகித்த பதவியை கே.பி.நல்லசாமி கூடுதலாக கவனித்துக் கொள்வார் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சிப்பணியாற்ற ஹெல்த் மிகவும் முக்கியம் எனக் கருதும் டிடிவி தினகரன், உடல்நிலை சரியில்லை எனக் கூறுபவரை வைத்து கட்சியை ஆக்டிவாக இயக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.
விழுப்புரம்
அண்மையில் விழுப்புரம் மாவட்ட அமமுக செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் ஐக்கியமாகிய நிலையில், டிடிவி தினகரன் கொஞ்சம் கூட அசராமல் புதிய நிர்வாகிகளை களமிறக்கினார். இப்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்துக்கும் விரைவில் புதிய மாவட்டச் செயலாளரை களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிவிக்கு புதிதல்ல
அமமுகவிலிருந்து செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச் செல்வன், என எத்தனையோ பேர் இதுவரை வெளியேறி இருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்து ஆட்களை களமிறக்கி கவனம் ஈர்த்தவர் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.