காரப்பொடி தெரியும்.. அதென்ன ’கரப்பான்’ பொடி? இட்லி சாப்பிட நினைத்தவருக்கு ஷாக்.. திண்டுக்கல் ’உவ்வே’
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சூடான இட்லியில் சுவையாக இட்லி பொடியை கலந்து சாப்பிடலாம் என நினைத்து பக்கத்துக் கடையில் இட்லி மிளகாய் பொடி வாங்கி வந்த வாடிக்கையாளருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. இட்லி பொடியில் கரப்பான் பூச்சி இருந்த நிலையில் இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உணவுப் பிரியர்களை சில உணவு தயாரிப்பு நிறுவனங்களும், உணவகங்களும் கடுமையாக ஏமாற்றி வருகின்றன என்று தான் கூற வேண்டும்.

குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக நடக்கும் உணவு பாதுகாப்புத்துறை ரெய்டுகள், பிரியாணி பிரியர்களுக்கும் உணவு பிரியர்களுக்கும் அதிர்ச்சியை அளித்து கொண்டிருக்கிறது.
சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரிப்பதாக சென்னையில் பிரபல பிரியாணி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதோடு சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் சாக்லேட்டில் புழு, மிக்சரில் பல்லி, தோசையில் கரப்பான் பூச்சி என்ற வரிசையில் தற்போது இட்லி பொடி பிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

திண்டுக்கல்லில் வாங்கப்பட்ட பிரபல நிறுவனத்தின் இட்லி மிளகாய் பொடி பாக்கெட்டில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் என்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். 34 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் காலையில் வேலைக்கு கிளம்புவதற்காக காலை உணவை சாப்பிட பிரபாகரன் அமர்ந்துள்ளார்.
அப்போது அவரது மனைவி இன்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆஹா ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் இட்லி மிளகாய் பொடியை வாங்கி வந்திருக்கிறார். தோசையை சுட்டு வைத்துவிட்டு இட்லி மிளகாய் பொடி தோசையில் கொட்டி சாப்பிட நினைத்த போது காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. ஆஹா ஃபுட்ஸ் இட்லி மிளகாய் பொடியில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து திண்டுக்கல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகைப்படம் மற்றும் அந்த இட்லி மிளகாய் பொடி பாக்கெட்டுடன் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே அடைக்கப்பட்ட உணவு பொருட்களில் இது போன்ற இறந்து போன உயிரினங்கள் இருப்பது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எவ்வளவோ பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்தாலும் வாடிக்கையாளர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே அதிகாரிகள் இதுபோன்ற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வாடிக்கையாளர்களின் உயிரை காக்க வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications