ED அதிகாரி முறைகேடுகள் தொடர்பாக.. சில ஆவணங்கள் சிக்கியுள்ளன: லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை
திண்டுக்கல்: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ED அதிகாரி முறைகேடுகள் தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற புகாரில் கையும் களவுமாக சிக்கியுள்ள அமலாகக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ED அதிகாரி முறைகேடுகள் தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் அங்கித் திவாரி என்பவர், கடந்த அக்டோபர் 29-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்புகொண்டு, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மறுநாளே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி அந்த அரசு ஊழியர் மதுரைக்கு சென்றபோது, அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம்தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார்.
பின்னர் முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தொடர்ந்து வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் மிரட்டியுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர் கடந்த மாதம் 30-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அங்கித் திவாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். இவரது முறைகேடுகள் தொடர்பாக சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதே முறையை பின்பற்றி அமலாக்கத்துறை பெயரை பயன்படுத்தி வேறு அதிகாரிகள் யாரையும் இவர் பணம் வசூலித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இவரது சதித்திட்டத்தில் மற்ற அமலாகக்த்துறை அதிகாரிகளின் தொடர்பு ஏதேனும் இருந்தால், அதைக் கண்டறியவும் விசாரணை நடத்தப்படும். அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனி மேற்கொண்டது. அவருக்கு தொடர்புடைய இடங்களில் மேலும் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications