ஆனா இந்த ஐடியா புதுசா இருக்குங்க! அவசர தேவைக்கு ரேஷன் கார்டு அடமானம்! அரிசி, பருப்பு தான் வட்டியா?
திண்டுக்கல்: திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியில் ஸ்மார்ட் கார்டுகளை அடமானமாக பெற்று விரல் ரேகையை மட்டும் கார்டு உரிமையாளர்களை வைக்க வைத்து ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்லும் பெண் குறித்த வீடியோ மூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டை அடமானமாக பெற்று பணம் வழங்கும் கும்பல் அதற்கான வட்டியாக அரிசி மற்றும் பருப்பை வாங்கிக் கொள்வதாகவும், அவற்றை கள்ள சந்தையில் விற்று பணம் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் பேகம்பூர் அடுத்துள்ளது பூச்சி நாயக்கன்பட்டி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் நாள்தோறும் கூலி வேலைக்கு செல்லக் கூடிய ஏழை எளிய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இங்கு இரண்டு ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் தங்களது பண பிரச்சனைக்காக ஸ்மார்ட் கார்டை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில், அப்பகுதி சேர்ந்த ஒரு பெண் தனது கையில் 20க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டை கையில் வைத்துக்கொண்டு ரேஷன் கடையில் அமர்ந்து பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடமானமாக பெறப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை வைத்து கொண்டு கார்டு உரிமையாளர்களை ரேஷன் கடைகளுக்கு வர வைத்து கைரேகை மூலம் ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, சமையில் ஆயில், பருப்பு போன்ற பொருட்களை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதாக தெரிய வருகிறது.
ஏற்கனவே திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ரேசன் அரிசிகள் கடத்தப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து உடனடியாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து ஸ்மார்ட் கார்டுகளை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போது ஏழை எளிய மக்களிடம் 10,000, 20,000 என கொடுத்து ரேஷன் கார்டுகளை அடமானமாக பெறும் அரிசி கடத்தல் கும்பல், மாதம் ஒருமுறை அவர்களை வரவழைத்து அரிசி பருப்பு ஆகியவற்றை ரேகை வைத்து பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அவற்றை அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்கின்றனர். குறிப்பாக ரேஷன் அரிசி ஆலைகளுக்கு விற்கப்படுவதாகவும், பருப்பு உள்ளிட்டவை மளிகை கடைகளுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இவை வட்டி மட்டும் தான் பத்தாயிரம் பணத்தை திருப்பிக் கொடுத்தால் ரேஷன் கார்டுகளை அவர்கள் திரும்ப ஒப்படைப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கின்றனர் உணவு வழங்கல் துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications