சூப்பர் அறிவிப்பு.. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!
திண்டுக்கல்: பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும், RTE மூலம் சுமார் 72,000 குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 100 ஆண்டுகளைக் கடந்த பள்ளிகளை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, முன்னாள் முதல்வர் கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
13 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பே தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் என்பது பெயரளவில் தான், அவர்கள் முழுநேரமாகப் பணியாற்றி வருகிறார்கள். ஓவிய ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உள்ள அவர்களை எப்படி எல்லாம் அரசுப் பணியில் எடுத்து கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டன.
பகுதிநேர ஆசிரியர்கள்
வடகிழக்கு பருவமழை மற்றும் அமைச்சர் பெருமக்கள் மாவட்டங்களில் முகாமிட்டிருந்ததன் காரணமாக அடுத்தகட்ட கூட்டம் சற்று தள்ளிப்போனது. மிக விரைவாக அடுத்தகட்ட கூட்டம் நடத்தப்பட்டு, எந்தெந்த வகைகளில் அவர்களைப் பணி நிரந்தரம் செய்யலாம் என்பது குறித்து மிக விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும். ஆர்.டி.இ கல்வி உரிமைச் சட்டம் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் சில தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஆர்.டி.இ சேர்க்கை
RTE மூலம் சுமார் 72,000 பிள்ளைகளை நாம் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். அவ்வாறு கட்டணம் வசூலித்த பள்ளிகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்தப் பணத்தை பெற்றோர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். இந்தக் குழப்பத்திற்கு முக்கிய காரணம் மத்திய அரசுதான். மாநில அரசு முதலில் பணத்தைச் செலுத்திவிடும், பின்னர் மத்திய அரசு அந்த நிதியை மாநில அரசுக்குத் திருப்பித் தரும்.
தனியார் பள்ளி கட்டணம்
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்துப் போட்டால் தான் பணம் தருவோம் என்று கூறி, மத்திய அரசு தரவேண்டிய நிதியை ஒட்டுமொத்தமாக நிறுத்தி வைத்துள்ளது. அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சனை இது. இருப்பினும், 71,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் சேர்க்கையை நாங்கள் உறுதி செய்துள்ளோம்" என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications