தாய்மாமன் உறவுன்னா சும்மாவா? ட்ராக்டர் லாரியில் அணிவகுத்த சீர்வரிசை..பங்காளிங்க திணறிப் போயிட்டாங்க!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனது தங்கையின் குழந்தைகளுக்கு நடைபெற்ற புது நன்மை விழாவில் லாரி மற்றும் டிராக்டரில் சீர் கொண்டு வந்து தாய்மாமன் அசத்தியுள்ளார். தற்போது இந்த காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் இருந்தாலும் தென் மாவட்டங்களில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது தாய்மாமன் சீர்வரிசை. தாய்க்கு பிறகு ஒரு குழந்தைக்கு வரும் முக்கியமான உறவு தான் தாய்மாமன் உறவு..

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதன் இறுதிக்காலம் வரை தாய்மாமன் இல்லாமல் எந்த நிகழ்வுகளும் நடைபெறாது. தென்மாவட்டங்களின் உயிர்நாடியான தாய்மாமன் சீர்வரிசையும் அப்படித்தான்.. காதுகுத்து பூப்புனித நீராட்டு விழா திருமணம் உள்ளிட்டவற்றில் தாய்மாமன் சீர்வரிசை இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நிறைவடையாது
தாய்மாமன் சீர்வரிசை: அந்த வகையில் திண்டுக்கல்லில் தனது தங்கையின் குழந்தைகளுக்கு நடைபெற்ற புது நன்மை விழாவில் லாரி மற்றும் டிராக்டரில் சீர் கொண்டு வந்து தாய்மாமன் அசத்தியுள்ளார். தற்போது இந்த காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. திண்டுக்கல் ஒ.எம்.ஆர் பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் எஸ்தர் செல்வ பாரதி - டோமினிக் சாலியோ தம்பதியினர். இவர்களுக்கு செரிக் ஆன்டோ, ஞான சஸ்மிகா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

முதல் திருவிருந்து: இவர்களுக்கு கிறிஸ்துவ மதத்தினர் கொண்டாடும் முதல் திரு விருந்து ஏற்பு விழா என அழைக்கப்படும் புது நன்மை விழா நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் குழந்தைகளின் தாய் மாமனும் எஸ்தர் செல்வ பாரதியின் சகோதரருமான வெள்ளோடு பகுதியை சேர்ந்த தாமஸ் ஜேசிபி, லாரி ஆகியவை வைத்து தொழில் செய்து வருகிறார்.

லாரியில் சீர்வரிசை: இந்நிலையில் புது நன்மை விழாவிற்கு தாய்மாமன் சீர் செய்வதற்காக இன்று ட்ராக்டர் மற்றும் கண்டைனர் லாரிகள் மூலம் 120 வகையான சீர்வரிசை பொருட்களை தாய்மாமன் சீராக கொண்டு வந்தார். அவற்றில் அரிசி, மளிகை பொருட்கள், பருப்பு வகைகள், இனிப்பு வகைகள், கார வகைகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்கள் 120 தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பிரம்மாண்டம்: மேலும் தனது சகோதரியின் பிள்ளைகளுக்கு 5 பவுன் நகையையும் தாய்மாமன் சீராக கொண்டு வந்தார் தாமஸ். இன்று லாரி மற்றும் டிராக்டர் மூலம் தாய் மாமன் சீர் கொண்டு வந்த இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இதுபோன்ற சீர்வரிசை நிகழ்வுகளை விளம்பரப்படுத்த வேண்டுமென்றே சிலர் கடன் வாங்கி பிரம்மாண்டமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications