லட்டு போல் 3 அறிவிப்பு! வீட்டுமனைப் பட்டா, 100 நாள் வேலை, முதியோர் ஓய்வூதியம்! அமைச்சர் சொன்ன தகவல்!
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், பலர் வீட்டுமனை கேட்டு மனு கொடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு இடம் தேர்வு செய்து வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் செட்டியபட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு கோட்டாட்சியர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வழங்கினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசுகையில்," செட்டியபட்டி கிராமத்திற்கு வரும் போதெல்லாம் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும் காரணம் பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வந்து கேட்பார்கள்.

ஆத்தூர் தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் செட்டியபட்டி ஊராட்சி முதலிடம் வகிக்கிறது: இதுவரை செட்டியபட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் என்னிடம் எந்த ஒரு கோரிக்கை மனு கொடுத்ததே இல்லை அதற்கு காரணம் ஊராட்சித் தலைவராக இருந்த ராஜா எந்த ஒரு நலத்திட்டமாக இருந்தாலும் சரி அதை செட்டியபட்டி கிராமத்திற்குக் கொண்டு வருவதில் பாடுபடுவார்.
கலைஞர் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த கழக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் செட்டியபட்டி ஊராட்சியில் உள்ள பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை மனு மட்டும் தான் கொடுத்தேன். உடனடியாக பள்ளியை தரம் உயர்த்தியதோடு கட்டிட வசதிக்கும் ஏற்பாடு செய்தார். இப்போது நான் உங்களை சந்தித்து உங்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறுவதை காட்டிலும் அதிக அளவில் நான் கவனம் செலுத்துவது உங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை விடுபடாமல் கிடைக்கச் செய்வதில் தான் என்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறேன்.
இங்கு பலர் வீட்டுமனை கேட்டு மனு கொடுத்துள்ளார்கள் அவருக்கு இப்பகுதியில் இடம் தேர்வு செய்து வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அதேபோல் முதல்வர் 100 நாள் வேலைத்திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் அந்த வேலைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டும் இருக்கிறோம்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. குறிப்பாக ஆத்தூர் தொகுதியில் மட்டும் 15 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சியில் அதை நிறுத்திவிட்டனர். விரைவில் விடுபட்டு போன முதியோர் உதவித் தொகை முதியவர்கள் நலன் காக்க அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications