பொதுக்குழு அதுவுமா? எடப்பாடி ஆதரவாளர் வீட்டுக்கு ஓபிஎஸ் விசிட்..கொந்தளிக்கும் ர.ர.க்கள்! பரபர அதிமுக
திண்டுக்கல்: சிறிது காலம் அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லில் பிரபலமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் வீட்டுக்கு திடீரென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளது திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் வருகை குறித்து அவர்கள் அளித்த விளக்கம் சற்றே அமைதியடைய வைத்திருக்கிறது.
அதிமுகவில் தனிப்பெரும் ஆளுமை கொண்ட தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சரும் அந்த கட்சியின் பொது செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து பல்வேறு சிக்கல்களையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிறைக்குச் செல்ல நேர்ந்த போதெல்லாம் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். குறிப்பாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்ந்தார்.
அவரது மறைவுக்கு பிறகு, பல சிக்கல்களுக்கு பிறகு ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி. கட்சிக்கு ஓபிஎஸ் என பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டார். அதிமுகவின் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களும் கட்சியினரும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் சென்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ். கீழ் கோர்ட்டில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவரால் அதிமுகவில் மீண்டும் நுழைய முடியவில்லை.
ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து பாஜக கூட்டணியில் இணைந்த அவர் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைய நிலையும் ஏற்பட்டது. இப்போதைக்கு எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஓபிஎஸ்.
இதற்கிடையே பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றிய செயலாளராக இருப்பவர் மோகன். அதிமுகவில் நீண்ட காலமாக பயணிப்பவர். ஒரு காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும் எதிர்காலம் கருதி எடப்பாடி பழனிச்சாமி அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திண்டுக்கல்லில் இரண்டு முக்கிய ஒன்றிய செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றனர். வத்தலகுண்டு மோகனும் ஓபிஎஸ் பின்னால் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலேயே இருந்தார். இந்த நிலையில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார் ஓபிஎஸ். இரவு நேரத்தில் சென்று வந்தது அதிமுக தொண்டர்களிடையே நிர்வாகிகள் இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மோகனைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினர். இந்த நிலையில் தான் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் மோகன். அதாவது மோகனின் மகனான அருண் தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கிறார். அவரும் மோகனும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அருணின் மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்றது. அதில் தான் ஓபிஎஸ் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டுக்கு ஓபிஎஸ் வந்து சென்றிருக்கிறார் என வதந்தி பரப்பி வருகின்றனர். அதற்கு இதற்கும் துளியும் சம்பந்தமில்லை எனக் கூறியிருக்கிறது. இதை அடுத்து அதிமுக தொண்டர்கள் அமைதியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications