நிறைய அவமானங்களை சந்திப்பவர்கள் எட்ட முடியாத உயரத்தை அடையப் போகிறார்கள்.. வைரமுத்து சொன்ன பாயிண்ட்
திண்டுக்கல்: நீங்கள் செய்கின்ற பணி உங்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் சுதந்திரமும் தனித்தன்மையும் எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விடக்கூடாது எனவும், இளம் தலைமுறைகள் உழைக்க தயாராவதில்லை மனித வேலையை குறைக்கும் கருவிகள் வந்த பிறகு ஓய்வு எடுக்க ஆசைப்படுவதாக கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். நிறைய அவமானங்களை சந்திப்பவர்கள் எட்ட முடியாத உயரத்தை அடையப் போகிறார்கள் என அர்த்தம் எனவும் கூறியுள்ளார்.
திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள ஜிடிஎன் கலைக் கல்லூரியில் 57 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 2021முதல் 23 ஆண்டு முதுகலை மற்றும் 2021 முதல் 24 ஆண்டு இளங்கலை பயின்ற கல்லூரி மாணவ மாணவிகள் 1,416 பேருக்கு பட்டங்கள் இன்று வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில்," மாணவர்களிடம் உங்களது லட்சியம் என்னவென்று கேட்டால் வழக்கறிஞர், டாக்டர், பேராசிரியர் எனச் சொல்வர்கள்.

ஆனால் அவ்வாறு நீங்கள் சொல்வது உங்களின் லட்சியம் அல்ல. நீங்கள் கூறுவது, உங்களுக்கு விருப்பமான துறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையின் மூலமாக ஏழைகளுக்கு இலவசமாக வாதாடுவோம், வறிய நிலை மக்களுக்கு இலவச மருத்துவம் செய்வோம், கடைநிலை மாணவனை முதல் மாணவனாக்க முன்னுரிமை அளிப்போம் என்ற கொள்கை வகுப்பதே லட்சியமாகும். ஆகவே, நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் லட்சியத்தை நிறுவிக் கொள்ள வேண்டும்.
மாணவர்களோடு உரையாடும் போது தான் எதிர்காலத்தோடு உரையாட முடிகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறைகள் உழைக்க தயாராவதில்லை. மனித வேலையை குறைக்கும் கருவிகள் வந்த பிறகு ஓய்வெடுக்க ஆசைப்படுகிறார்கள். அலைபேசி, லேப்டாப், ஒப்பனை, தொடுதிரை உலகம், இணையம், ஜன்னலோர கதவு, கோப்பை தேநீர் என வாழ்கிறார்கள்.
ஆனால் அதுவே வாழ்வென்று நீங்கள் தீர்ந்து போக முடியாது. வாழ்க்கையில் விடை தெரியாத விஷயங்களில் இருந்து விலகிக்கொள்ள விதி மீது பழி போடுகிறோம். இங்கு உழைக்காமல் உயர்வு வராது. முப்பால் தந்த திருவள்ளுவரே 'மெய் வருத்த கூலி தரும்' என கூறி இருக்கிறார். ஆகவே உடல் மெய் வருத்தி உயர்வுக்கு வரவேண்டும். நீங்கள் செய்கிற பணி உங்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
என்றென்றைக்கும் உங்களின் சுதந்திரமும், தனித்தன்மையையும் இழந்து விடக்கூடாது. விலங்குக்கும், மனிதனுக்கும் வித்தியாசங்கள் உண்டு. மனிதன் விடுதலை பெற்றதால்தான் சுயமாக சிந்தித்தான். ஆறறிவு பெற்று சிரிக்க பழகினான். ஆனால் விலங்குக்கு விடுதலை கிடையாது. நிறைய அவமானங்களை சந்திப்பவர்கள் எட்ட முடியாத உயரத்தை அடையப் போகிறார்கள் என அர்த்தம். தொடர் தோல்விகளும், தடைகளும் சந்திப்பவர்கள் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அர்த்தம். பட்டதாரிகளான நீங்கள் திட்டங்கள் தீட்டுங்கள். அதன்படி செயல்படுங்கள்" என பேசினார்.












Click it and Unblock the Notifications